கிரெடிட் கார்டில் பெட்ரோல், டீசல் உபயோகிப்பவர்களுக்கு, ஆயில் நிறுவனங்கள் கேஸ் பேக் ஆஃபரை இதுவரை வழங்கி வந்தன, ஆனால் இனி இந்த சலுகை கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளன.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், போலி ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதற்காகவும், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்தது.
இதனால் புழக்கத்தில் உள்ள நோட்டுகள் முக்கால் வாசிக்கும் அதிகமாக செல்லாத நோட்டுகளாகவே இருந்தன.
சில்லறை தட்டுப்பாடு
இதனால் மக்களிடையே பணப்புழக்கம் என்பது கடுமையான பிரச்சனையாக இருந்தது. ஏன் கையில் இருக்கும் பணத்தை கூட உபயோகிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட உபயோகிக்க முடியாமல் தள்ளாடி வந்தன. இந்த நிலையிலேயே இந்திய ரிசர்வ் வங்கி புதிய 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. ஒரு புறம் பணம் இருந்தாலும் சில்லறை தட்டுப்பாடுகளே நிலவி வந்தன. மறுபுறம் புதிய நோட்டுகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வந்தனர்.
டிஜிட்டல் பேமென்ட்கள் ஊக்குவிப்பு
இந்த நிலையிலேயே டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான பல சலுகைகளை அரசு வெளியிட்டது. மேலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ-வாலட் என டிஜிட்டல் பேமென்ட் வசதிகளையே அரசு ஊக்குவித்தது. இந்த நிலையில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டில் பெட்ரோல் டீசல் போடுபவர்களுக்கு பற்பல சலுகைகளை வழங்கி வந்தன. இதை மேலும் ஊக்குவிக்கும் விதமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட சில நிறுவனங்களிடம் அரசு டிஜிட்டல் பேமென்ட்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் படியும் கேட்டுக் கொண்டது.
கேஸ்பேக் சலுகை
இதையடுத்தே இந்த ஆயில் நிறுவனங்கள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இ-வாலட்கள் மூலம் எரிபொருளுக்கான பணம் செலுத்துபவர்களுக்கு 0.75 சதவிகிதம் தள்ளுபடியை வழங்கி வந்தன. இந்த நிலையில் தற்போது இந்த சலுகையானது இனி கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்துபவர்களுக்கு கிடையாது என்றும், இது அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
டெபிட் கார்டு, இ-வாலட் சலுகை உண்டு
எனினும் டெபிட் கார்டு மற்றும் இ-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு இந்த சலுகை தொடரும் என்றும் தெரிகிறது. இதையடுத்தே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பெட்ரோல் டீசல் போடுபவர்களுக்கு, கேஸ் பேக் சலுகையானது, வரும் அக்டோபர் 1 முதல் ரத்து செய்யப்படுகிறது என்றும், தனது வாடிக்கையாளர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளது.
ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்
இந்த நிலையில் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் கடந்த 2017 - 2018ம் ஆண்டில் இந்த மூன்று நிறுவனங்களும் 1,165 கோடி ரூபாயை செலுத்தியுள்ளனராம், இதே எம்.டி.ஆரை தாங்குவதற்காக வங்கிகளும் 266 கோடி ரூபாயையும் செலுத்தியுள்ள நிலையில், இது 2018 - 2019ம் ஆண்டில் 2,000 கோடி ரூபாயை தொட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இதன் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கடந்த 2016ல் 10% இருந்த விகிதம் 2018ல் 25%மாக அதிகரித்துள்ளது.