என்ன தலைப்பு இது..? ஒரே ஒரு கார்ப்பரேட் கம்பெனியால், ஒரு அரசு வங்கிக்கு என்ன ஆபத்து வந்துவிடும்..! அப்படி என்ன பிரச்னை நடந்து இருக்கிறது எனக் கேட்கிறீர்களா..? வாருங்கள் விவரமாக பார்ப்போம்.
கடந்த சில நாட்களாக பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (PMC - Punjab & Maharashtra Cooperative Bank) வங்கி தொடர்பாக பல செய்திகளை படித்திருப்பீர்கள். டெபாசிட் செய்திருக்கும் மொத்த பணத்தில் ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்கிற கடுமையான கட்டுப்பாடுகள் எல்லாம் இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்குத் தான் விதிக்கப்பட்டது.
இப்போது பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களின் தொடர் முற்றுகை போராட்டத்தால் 1,000 ரூபாய் என்கிற வரம்பு சில மணி நேரங்களுக்கு முன் தான் 10,000 ரூபாயாக மாற்றப்பட்டது. சரி பிஎம்சி வங்கியில் இருந்து தொடங்குவோம்.
பி எம் சி வங்கி
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி என்கிற பெயரில் இருக்கும் இந்த வங்கி, 1984ஆம் ஆண்டு ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்டது. படிபடியாக வளர்ந்து, இன்று இந்தியா முழுக்க 137 வங்கி கிளைகளுடன் தன் வியாபாரத்தை பார்த்து வருகிறது. குறிப்பாக மும்பை நகரப் பகுதிகளில் தான், பிஎம்சி வங்கியில் பாதிக்கும் மேற்பட்ட கிளைகள் பரவிக் கிடக்கின்றனவாம். இந்த வங்கியின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு வியாபாரிகள், மாதச் சம்பளம் வாங்காத ஒப்பந்த ஊழியர்கள் தானாம். இப்போது இந்த வங்கி வாடிக்கையாளர்களின் தலை மீது ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது.
அந்தக் கத்தி ஆர்பிஐ கத்தி
இந்த பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab and Maharashtra Cooperative Bank)-ஐ நம்பி பணம் போட்டவர்கள், எக்காரணத்தை முன்னிட்டும், ஒரு கணக்கில் இருந்து 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்கள். அதாவது ஒருவருக்கு ஒரு சேமிப்பு கணக்கு ஒரு நடப்புக் கணக்கு இருக்கிறது என்றால், ஒரு சேமிப்புக் கணக்கில் இருந்து 10,000 ரூபாய் மற்றும் ஒரு நடப்புக் கணக்கில் இருந்து 10,000 ரூபாய் என மொத்தம் 20,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியுமாம். இது தான் பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தலை மீது தொங்கும் கத்தி..!
ஒரே ஒரு கார்ப்பரேட் கம்பெனி
இப்படி ஒரு கொடூரமான கத்தி, பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்கள் தலை மீது தொங்கக் காரணம் ஒரே ஒரு கார்ப்பரேட் கம்பெனி தான் என்றால் கொஞ்சம் நம்ப சிரமமாக இருக்கிறதா? நம்பித் தான் ஆக வேண்டும். அந்த உத்தம கம்பெனியின் பெயர் (HDIL - Housing Development and Infrastructure Limited) ஹவுசிங் டெவலப்மென்ட் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்.
ஹெச் டி ஐ எல்
இது ஒரு தனியார் நிறுவனம். இந்த நிறுவனம் கட்டிடங்கள் கட்டுமானப் பணிகளைச் செய்வது, குடியிருப்புத் திட்டங்களை கட்டுமானம் செய்வது, ஒப்பந்த அடிப்படையில் பெரிய கட்டுமானப் பணிகளைமுடித்துக் கொடுப்பது, வணிக ரீதியிலான கட்டடங்களை கட்டிக் கொடுப்பது, குடிசை மாற்று வாரிய திட்டங்களை எடுத்து கட்டி கொடுப்பது.. என ரியல் எஸ்டேட் துறை சார்ந்த பல வேலைகள் செய்து வருகிறார்கள்.
ஹெச் டி ஐ எல் சிறப்புகள்
குறிப்பாக இந்த நிறுவனம் SEZ என்று அழைக்கப்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில், கட்டுமானத் திட்டங்களை எடுத்து கட்டிக் கொடுக்கிறார்களாம். சாதாரண மலிவு விலை பட்ஜெட் வீடுகள் தொடங்கி, வில்லாக்கள், பங்களாக்கள், பெரிய பெரிய ஷாப்பிங் மால், மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள், பெரிய பெரிய அலுவலகங்கள் வரை எல்லா கட்டுமானப் பணிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்கள். இந்த நிறுவனம் இந்திய பங்குச் சந்தைகளில் கூட பட்டியல் இடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்பிஐ நடவடிக்கை
இவ்வளவு நல்ல நிறுவனத்துக்கு தான் பிஎம்சி வங்கி கடனாக 2,500 கோடி ரூபாயைக் கொடுத்து இருக்கிறது பிஎம்சி வங்கி. ஆனால் ஹெச் டி ஐ எல் தான் செலுத்த வேண்டிய தவணைகளை முறையாகச் செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது. இப்படி கடன் வாங்கிய ஒருவர் முறையாக தவணைகளைச் செலுத்த வில்லை என்றால், அவர்களை வாராக் கடன் பட்டியலில் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்க்கவில்லை என்றால் அது ஆர்பிஐ சட்ட விதிமுறைகள் படி மிகப் பெரிய தவறு. அந்த தவறைத் தான் பிஎம்சி வங்கி அசால்ட்டாக செய்து இருக்கிறது.
அதனால் தான் கத்தி
அதனால் தான் ஆர்பிஐ உடனடியாக தலையிட்டு டெபாசிட் செய்தவர்கள், ஒரு வங்கிக் கணக்குக்கு10 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க வேண்டும் என மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. வாடிக்கையாளருக்கு இப்படி என்றால், வங்கி நிர்வாகம் இனி எக்காரணத்தை முன்னிட்டும்
புதிதாக கடன்களைக் கொடுக்கவோ,
கடன்களை ரெனீவ் செய்யவோ,
புதிதாக முதலீடுகளைச் செய்யவோ,
புதிதாக கடன் வாங்கவோ,
புதிதாக டெபாசிட்களை வாங்கவோ,
தன் சொத்துக்களை விற்கவோ கூடாது.
அப்படி எதையாவது செய்ய வேண்டும் என்றால் ஆர்பிஐயிடம் இருந்து எழுத்துப் பூர்வமாக ஒப்புதல் வாங்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இந்த கட்டுப்பாடுகள் அடுத்த 6 மாத காலத்துக்கு இருக்கும் எனவும் கத்திக்கு மேல் கத்தியை பிஎம்சி வங்கி மீது தொங்கவிட்டு இருக்கிறது ஆர்பிஐ.
வாடிக்கையாளர்கள்
ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை வெளியே எடுக்க கூடாது என்கிற செய்தி மெல்ல பரவுகிறது. இப்படிச் சொன்னவுடன் பிஎம்சி வங்கியில் பணம் போட்ட சாதாரண ஏழை எளிய மக்கள் பதறியடித்துக் கொண்டு தங்களுடைய வங்கிக் கிளைகளுக்கு ஓடி இருக்கிறார்கள். சில கிளைகளில் காலை 6 மணியிலிருந்தே வாடிக்கையாளர்கள் வரிசை கட்டி நின்று தங்கள் பணத்தை கேட்கத் தொடங்கி இருக்கிறார்களாம். ஆர்பிஐ விதிமுறைகளை சொல்லி புரியவைக்க முடியாத வங்கி அதிகாரிகள், தங்கள் பாதுகாப்புக்கு கடைசியாக காவல் துறையினரை உதவிக்கு அழைத்து இருக்கிறார்கள். பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களின் எழுச்சியைப் பார்த்துவிட்டு தான், ஆர்பிஐ 1,000 ரூபாயாக இருந்த உச்ச வரம்பை 10,000 ரூபாயாக மாற்றி இருக்கிறது.
வங்கி கணக்கு
வழக்கமாக ஒரு வங்கி தன்னிடம் வந்து டெபாசிட் செய்யும் டெபாசிட்தாரர்களின் பணத்தை தான், மற்றவர்களுக்கு கடனாகப் கொடுத்து அதிக வட்டியை வசூலிக்கும். கடன் கொடுத்து வரும் அதிக வட்டித் தொகையில் ஒரு பகுதியை டெபாசிட் தாரர்களின் பணத்திற்கு வட்டியாக கொடுக்கும். ஆக கடன் வட்டி வரவு - டெபாசிட் வட்டி செலவு = வங்கியின் லாபம்.
என்ன லாஜிக் இது
இந்த பிஎம்சி வங்கியில் ஆட்டோ ஓட்டுநர், தள்ளு வண்டி வியாபாரி, சிறு வியாபாரிகள், ஒப்பந்த ஊழியர்கள் போன்றவர்கள் டெபாசிட் செய்திருக்கும் 11,000 கோடி ரூபாயில் இருந்து தான், ஹெச் டி ஐ எல் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 2,500 கோடி ரூபாய் கடன் கொடுத்து இருக்கிறார்கள். ஏழை எளிய மக்களின் பணத்தை பொறுப்பற்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்ததும் இல்லாமல், இப்போது பணத்தையும் எடுக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பது, எந்த வகையிலான நியாயம் என்று சத்தியமாகப் புரியவில்லை. சாதாரண மக்கள் உழைத்து சம்பாதித்து, தன்கள் வங்கிக் கணக்கில் போட்ட தங்கள் பணத்தை எடுக்கக் கூட, உயிரை விட்டுப் போராட வேண்டும் என்றால் அது என்ன மாதிரியான சட்டம், ஒழுங்கு நெறிமுறை எனப் புரியவில்லை.
எளிய மக்கள்
பொதுவாக ஒரு சாதாரண விவசாயியோ அல்லது மாத சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண நபரோ வாங்கிய கடனை ஒழுங்காக கட்டவில்லை என்றால், வீட்டிற்கு ஆள் அனுப்புவது தொடங்கி கார்ப்பரேட் நிறுவன அடியாட்களை விடுத்து மிரட்டுவது வரை அனைத்தையும் உபயோகிக்கிறார்கள் வங்கி தரப்பினர்கள். ஆனால் வங்கியின் மொத்த கடனில் சுமார் 20 முதல் 30 சதவீதத்தை ஒரே நபராக, வாங்கி இருக்கும் ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் இப்படி எந்த ஒரு அடாவடித்தனத்தையும் வங்கி தரப்பினர்கள் செய்வதில்லை. இதற்கிடையில் நம் பாரதப் பிரதமர் வேறு சொத்துக்களை உருவாக்கும் தனியார் நிறுவனங்களை நாங்கள் மதிப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது தான் வேதனையிலும் வேதனை.