மொபைல் மற்றும் டிவி விற்பனை கொடிகட்டிப் பறந்த இரு முக்கியமான நிறுவனங்கள் சோனி மற்றும் சாம்சங். சீனா நிறுவனங்கள் தலையெடுக்கும் முன் வரையில் சோனி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் ஒருவருக்கு ஒருவர் கடுமையான போட்டி போட்டு வந்தனர்.
சீன நிறுவனங்கள் களத்தில் வந்த பின்பு சோனி மொபைல் மற்றும் டிவி விற்பனையில் அடையாளம் தெரியாமல் போனது. ஆனால் சாம்சங் பல தரப்பட்ட மொபைல் போன்களை தயாரிக்கும் காரணத்தால் இதுநாள் வரையில் தப்பித்துக்கொண்டு இருக்கிறது.
ஆனால் இது டிவி விற்பனையில் சாம்சங் நிறுவனத்திற்குக் கைகொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ஏன் தெரியுமா..?
சாம்சங் அதிரடி முடிவு
கொரிய நிறுவனமான சாம்சங் மொபைல் வர்த்தகத்தில் தட்டுத்தடுமாறி பயணம் செய்து வரும் நிலையில் டிவி விற்பனையில் இந்நிறுவனம் பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இதற்கும் சீன நிறுவனங்கள் தான் காரணம் என்றால் மிகையில்லை.
சீன நிறுவனங்கள்
எம்ஐ, ஒன்பிளஸ், சானியோ போன்ற பல நிறுவனங்கள் பெரிய வடிவிலான டிவிகளை குறைந்த விலையில் மட்டும் அல்லாமல் தரமானதாகவும் இருப்பதால் சாம்சங், சோனி நிறுவனங்களின் டிவி விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
சாம்சங்
இந்நிலையில் சாம்சங் இனி 32 இன்ச் டிவியை இனி தயாரிக்கவும், விற்பனை செய்ய வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் தற்போது ஸ்டாக்-இல் இருக்கும் டிவிகளை மட்டும் விற்பனை செய்துவிட்டு மொத்தமாக இப்பிரிவு விற்பனையில் இருந்து மொத்தமாக வெளியே முடிவு செய்துள்ளோம் என சாம்சங் இந்திய உயர் நிர்வாக அதிகாரி ராஜூ புல்லன் தெரிவித்துள்ளார்.
இந்தியா
இந்தியாவில் தற்போது அதிகவேக பிராண்ட்பேன்ட் மற்றும் மொபைல் இண்டர்நெட் சேவை கிடைக்கும் காரணத்தால் இந்தியாவில் ஸ்மார்ட் டிவி விற்பனை அதிகமாகியுள்ளது. இதை சியோமி, டிசிஎல், ஐஎப் பால்கன், தாம்சன் போன்ற சீன நிறுவனங்கள் பெரிய அளவில் பயன்படுத்திக் கொண்டது.
இதனால் சாம்சங், எல்ஜி மற்றும் சோனி நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தக சரிவைச் சந்தித்தது.
ஆதிக்கம்
சீன நிறுவனங்களின் ஆதிக்கம் எவ்வளவு இருந்தாலும் சாம்சங் டிவி விற்பனையில் இந்தியாவில் கிட்டதட்ட 28 சதவீத வர்த்தக சந்தையைப் பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சியோமி உடன் சாம்சங் போட்டிப் போட்டு விலையைக் குறைத்து விற்பனை செய்தால் இன்னும் அதிகமான வர்த்தக சந்தையை சாம்சங் பெற முடியும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.