சென்னை : ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி என்பது தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கும் இந்த வேளையில், இந்த துறையினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும், பண்டிகை காலத்திலாவது தேவை அதிகரிக்கும் என்பதே. ஆனால் இந்த குறிப்பிட்ட காலத்தில் கூட எந்தவிதமான தேவையும் அதிகரிக்கவில்லை என்பதற்கு சான்றாகவே அசோக் லேலண்ட் நிறுவனம், மீண்டும் தனது உற்பத்தி நிறுவனத்திற்கு 5 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது.
சென்னை ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம், ஆட்டோமொபைல் துறையில் முக்கிய பங்கு வகித்து வந்த ஒரு நிறுவனம், இந்த நிலையில் மிக மோசமான நுகர்வினால், இந்த நிறுவனம் பெரும் பின்னடைவை கண்டுள்ளது.
அதிலும் ஏற்கனவே தனது உற்பத்தி ஆலைகளுக்கு 59 நாட்கள் கட்டாய விடுமுறை அளித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 5 நாட்கள் விடுமுறையை அதிகரித்துள்ளது.
ஏற்கனவே பல முறை இந்த நிறுவன விடுமுறை அளித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் எண்ணூர் பிளான்டிற்கு விடுமுறையை அளித்துள்ளது. குறிப்பாக செப்டம்பர் 28, 30, அக்டோபர் 1, 8, 9 ஆகிய நாட்களில் இந்த விடுமுறையை அளித்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் முன்னதாக ஏற்கனவே தனது எண்ணூர் ஆலைக்கு 16 நாட்கள் விடுமுறை என்றும், ஓசூர் 1 மற்றும் 2வது ஆலைகளுக்கு ஐந்து நாட்கள் விடுமுறையும், ஆல்வார் மற்றும் பந்தாரா ஆலைகளுக்கு 10 நாட்கள் விடுமுறையும், அதிகபட்சமாக பந்த் நகாரில் 18 நாட்கள் விடுமுறையும் அளித்தது. இந்த நிலையில் மீண்டும் தனது எண்ணூர் ஆலைக்கு 5 நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கனவே விற்பனையில் சரிவை கண்டிருந்தாலும், தற்போது மொத்த கனரக வாகன விற்பனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 70 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளதாகவும், குறிப்பாக டிரக் வாகன விற்பனையானது வெறும் 3,336 ஆகவும், இது முந்தைய ஆண்டில் 11,135 ஆகவும் விற்பனை செய்யப்பட்டிருந்ததாகவும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
குறிப்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது மொத்த விற்பனையிலேயே 28 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், வெறும் 10,927 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் கூறியிருந்தது. மேலும் உள்நாட்டு விற்பனையும் 29 சதவிகிதம் சரிந்து 10,101 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 14,205 வாகனங்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த கட்டாய விடுமுறையால், வேலையில்லா நாட்களுக்கு செலுத்த வேண்டிய ஊதியங்கள் பற்றி, அசோக் லேலண்ட் ஊழியர் சங்கத்துடன் கலந்துரையாடப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.