இந்திய ஆட்டோமொபைல் சந்தை மிகப்பெரிய பிரச்சனையில் இருப்பது எல்லோருக்கும் தெரியும், மத்திய அரசு தற்போது வரியை குறைத்து ஏதுவான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தாலும் மக்களுக்கு இந்தப் பயன்கள் முழுமையாகச் சென்று கார் விலை குறையுமா என்றால் சந்தேகம் தான். காரணம் டீலர்கள் அதிக லாபத்திற்காகக் காரின் அடிப்படை விலையைக் குறைக்காமல் ஏமாற்றுவதாகப் பல இடங்களில் செய்திகள் வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் இந்தப் பிரச்சனையும் அடுத்தச் சில வாரங்களுக்குள் தீர்ந்துவிடும் என நிச்சயமாக நம்பப்படுகிறது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்தியாவின் 4வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான திகழும் போர்டு மோட்டார்ஸ் இந்தியாவை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்துள்ளது.
போர்டு மோட்டார்ஸ்
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் போர்டு மோட்டார்ஸ் இந்தியாவிலும் வர்த்தகம் செய்து வருகிறது. அதிக அளவிலான மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யாவிட்டாலும் இந்நிறுவனத்தின் சில முக்கியமான கார்களின் விற்பனை குறையாமல் இருப்பது போர்டு-இன் வலிமை.
இந்தியா வேண்டாம்
இந்நிலையில் போர்டு மோட்டார்ஸ் இந்திய வர்த்தகத்தை விட்டு வெளியேற முடிவு செய்த நிலையில் இந்தியாவில் இருக்கும் சில சதவீத வர்த்தகத்தைக் கைவிட மனமில்லை. இதனால் வர்த்தகத்தை முழுமையாக வேறு நிறுவனத்திற்குக் கைமாற்ற முடிவு செய்தது போர்டு மோட்டார்ஸ்.
மஹிந்திரா
போர்டு மோட்டார்ஸ் தனது இந்திய வர்த்தகம் மற்றும் உற்பத்தி என அனைத்து விதமான பணியில் இருந்தும் தனது தலையீட்டை விலகும் காரணத்தால் இது வளரும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமான வாய்ப்பு.
இந்த வாய்ப்பை தவறவிடாமல் ஆனந்த் மஹிந்திரா பெற்றார்.
புதிய நிறுவனம்
போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து வர்த்தகம் மற்றும் உற்பத்தியையும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கைப்பற்றுகிறது.
இதற்காக இரு நிறுவனங்கள் மத்தியில் புதிய நிறுவனமே உருவாக்கப்பட உள்ளது. இப்புதிய நிறுவனத்தின் மஹிந்திரா 51 சதவீத பங்குகளும், போர்டு 49 சதவீத பங்குகளையும் பெற உள்ளது.
உற்பத்தி ஆலைகள்
இந்தியாவில் போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சென்னையிலும், குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியிலும் தலா ஒரு தொழிற்சாலை உள்ளது. இப்புதிய வர்த்தகப் பங்கீட்டில் சனந் தொழிற்சாலை இல்லாமல் அதைப் போர்டு நிறுவனமே நேரடியாகக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் போர்டு அடுத்தச் சில வருடத்தில் 11 பில்லியன் டாலர் பணத்தைச் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.