டெலிகாம் காட்டுப்பாட்டு ஆணையமான டிராய் வல்லரசு நாடுகளில் இருப்பதைப் போலவே இந்தியாவிலும் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யத் தேவையான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதன் காரணமாகத் தற்போது டிராய் டெலிகாம் நிறுவனங்களுக்கு 5ஜி அலைகதிர்களை ஏலம் விடப் போவதாக அறிவித்துள்ளது.
இதற்கு அங்காளி பங்காளி வித்தியாசம் இல்லாமல் ஜியோ, ஏர்டெல் உட்பட அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் மறுப்பு தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
4ஜி சேவையை மிகப்பெரிய அளவில் மக்களுக்குக் கொண்டு சேர்ந்த ஜியோ நிறுவனமே 5ஜி அலைகதிர்களை ஏலம் விட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது.
ஏலம் விடும் முன்னர் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி அலைகதிர்களைப் பயன்படுத்தும் அளவிற்கான தளத்தை உருவாக்கி சோதனை செய்ய வேண்டும். அதற்குச் சில கால அவகாசம் தேவை. அனைத்திற்கும் தாண்டி 5ஜி அலைகதிர்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது இப்படியிருக்கும் சூழ்நிலையில் அலைகதிர்களை ஏலத்தில் விடுவது சரி அல்ல என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்டெல், ஐடியா-வோடபோன்
ஜியோ கூறிய இதே காரணங்களை முன்வைத்து இந்நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான ஏர்டெல், ஐடியா-வோடபோன் ஆகிய நிறுவனங்களும் 5ஜி அலைகதிர் விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது மட்டும் அல்லாமல் தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ள 4ஜி அலைகதிர்கள் ஏலத்திற்கு விடுமாறு டிராய் அமைப்பிடம் கேட்டுக்கொண்டு உள்ளது.
2021
டெலிகாம் துறை ஆய்வு நிறுவனத்தின் மூத்த தலைவர் ஒருவர், இந்தியாவில் 5ஜி அலைகதிர்களை ஏலம் விடச் சரியான நேரம் 2021ஆம் ஆண்டுத் தான். தற்போது ஏலத்திற்கு விட்டாலும் அதை வாங்க யாரும் இல்லை, வாங்கினாலும் பயனில்லை. மேலும் தற்போது குறிப்பிடப்பட்டு உள்ள 5ஜி அலைகதிர்களின் விலையும் அதிகமாக இருப்பதால் இத்துறை நிறுவனங்களை இது அதிகம் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாங்க முடியாது
மேலும் டிராய் கூறியுள்ள விலைக்கு எங்களால் 5ஜி அலைகதிர்களை வாங்க முடியாது என்று ஏர்டெல் மற்றும் ஐடியா -வோடபோன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் 5ஜி அலைகதிர்கள் விற்பனை செய்யப்படும் விலையை விடவும் இது 7 மடங்கு அதிக விலை என்பது குறிப்பிடத்தக்கது.
விலை
டிராய் அறிவித்துள்ள படி தற்போது ஒரு மெகாஹெட்ஸ் 5ஜி அலைகதிர்களுக்கு 492 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் 5ஜி அலைகதிர்களைப் பயன்படுத்த குறைந்தபட்சம் ஒரு நிறுவனம் 20 மெகாஹெட்ஸ் அலைகதிர் வேண்டும் அதற்கு 9,840 கோடி ரூபாய் செலுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
இதை உண்மையில் சுமையாகவே பார்க்கப்படுகிறது. காரணம் இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தாலும் மலிவான கட்டணங்கள் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் 5ஜி வைத்து அதிக வருமானம் பார்க்க முடியாது.