டெல்லி: பொருளாதார விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆலோசனை வழங்கும், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் இருந்து ஷமிகா ரவி மற்றும் ரத்தின் ராய், ஆகியோர் இந்த குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொது நிதிக் கொள்கை நிலையத்தின் இயக்குனராக இருக்கும் ரத்தின் ராய் கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி, தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தார். குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் முதல் பட்ஜெட் பற்றியும் பல மாற்றுக் கருத்துகளை முன் வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இந்த ஆலோசனை குழுவின் மற்றொரு முக்கிய உறுப்பினரான ஷாமிகா ரவி தொடர்ந்து பல ட்விட்டர் பதிவுகளில் பல கருத்துகளை முன் வைத்தி வந்தவர்.
பொருளாதார ஆலோசனை குழுவில் இருந்து நீக்கம்
அதிலும் முன்னாள் நிதி அமைச்சரும், குடியரசுத் தலைவராக இருந்தவருமான பிரணாப் முகர்ஜியின் பொருளாதார முடிவுகளிலிருந்து, தற்போதைய நிதியமைச்சரின் இப்போதைய முடிவுகள் வரை பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வந்தார். இந்த நிலையில் தான் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அரசு தரப்பில், அரசின் பொருளாதார முடிவுகளை ஆக்கப்பூர்வமாக விமர்சித்த ஷமிலா ரவியும், ரத்தின் ராயும் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரம் தேக்க நிலையில் உள்ளது
குறிப்பாக பொருளாதாரம் ஆய்வாளரான, ஷமிகா ரவி இந்தியா பெரும் பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்து வருவதாக வெளிப்படையாக தெரிவித்து வந்தார். அவரின் சமீபத்திய ட்விட்டரில் பொருளாதார தேக்க நிலை குறித்த கேள்விக்கு, இந்தியா தற்போது பெரும் பொருளாதார தேக்கநிலையைச் சந்தித்து வருகிறது. இதனைச் சமாளிக்க அனைத்து துறைகளுக்கும் இலக்கு நிர்ணயித்து, தேசிய வளரச்சித் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். மேலும் பொருளாதாரத்தை சீர்படுத்த பெரிய சீர்திருத்தங்கள் தேவைப்படும்; வெறும் டிங்கரிங் வேலைகள் பயன் தராது என்றும் அதிரடியாக தனது கருத்துகளை பதிவு செய்திருந்தார்.
புகையிலை சிகரெட்டை ஏன் தடை செய்யவில்லை
இதே போல் மத்திய நிதிமையச்சர் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக இ-சிகரெட் தடை செய்யப்பட்டபோது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தார். குறிப்பாக இ-சிகரெட்டுகளுக்கு அதிக வரிகள் இருக்கும் போது தடை எதற்கு? மேலும் இதே மற்ற புகையிலையினால் ஆனா சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் இருக்கும் போது இ-சிகரெட்டுக்கு மட்டும் தடைவிதிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் பொருளாதார நிலவரம் என்பது நிதித்துறைக்கு மட்டும் பொறுந்தும் என்று நினைக்கவேண்டாம், இது நிறுவனங்களின் வளர்ச்சிக்கு அக்கவுண்ட்ஸ் பிரிவை மட்டும் சுட்டிக் காட்டுவது போல் ஆகும் என்றும் கூறியுள்ளார்.
மோடிக்கு நன்றி
பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், ஷமிலா ரவி, பிரதமர் மோடிக்கு, ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். ஏனெனில் இப்படி நல்ல வாய்ப்பை கொடுத்தமைக்காக பிரதமர் மோடிக்கு நன்றி என்றும், இதனால் நான் பலவற்றை கற்றுக் கொண்டேன் என்றும்,இது எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது என்றும் கூறியதோடு, இனி பத்திரிக்கையாளர்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
கடன் பத்திரம் பற்றி விமர்சனம்
இதே மற்றொரு ஆலோசகரான ரத்தின் ராய் மத்திய அரசின் வெளிநாட்டு கடன் பத்திரத்தை பற்றி விமர்சித்தார் என்றும், மேலும் மத்திய அரசில் பல மறைமுக சிக்கல்களும் இருக்கிறது என்றும் விமர்ச்சித்தார் என்றும், இதனால் பிரதமர் மோடியின் ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இந்தியா நாணய வங்கியான ரிசர்வ் வங்கியான முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், வெளிநாட்டு நாணய மதிப்பில் வழங்க விருக்கும் கடன் பத்திர முதலீட்டு திட்டத்தினால், இந்தியாவுக்கு எந்த பயனும் இல்லை, மாறாக இதனால் இந்தியாவிற்கே ஆபத்தே என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு ஆபத்து
இவ்வாறு வெளியிடப்படும் உலகளாவிய பத்திரமானது உள்ளூர் சந்தைகளில் மட்டும் அல்லாது, வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளர்களும் முதலீடு செய்வார்கள். இது இந்தியாவுக்கு அதிகளவு முதலீட்டை ஈர்க்கும். ஆனால், இந்தியாவில் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வளர்ச்சி இல்லை என்று தெரியவரும் பட்சத்தில், இது உண்மையில்லை என்று தெரிய வரும் போது முதலீட்டை திரும்ப கேட்கும்போது, இது மிகப்பெரிய பிரச்சனையாகவே இருக்கும். பின்னர் இதற்காக இந்தியா கவலை பட வேண்டியதாயிருக்கும் என்றும் ரகுராம் ராஜன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.