விஜயவாடா: ஆந்திர மாநிலத்தில் வரும் அக்டோபர் 1 முதல் அரசு மதுபான கடைகள் செயல்படும் என்று துணை முதல்வர் நாராயண சுவாமி தெரிவித்துள்ளார்.
முன்னர் ஆந்திராவில் டெண்டர் மூலம் தனியாருக்கு மதுக்கடைகள் மற்றும் பார் உரிமம் போன்றவை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த திட்டத்தினை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தமைமையிலான ஆந்திர அரசு தற்போது மாற்றியுள்ளது.

இது குறித்து ஆந்திராவின் கலால் மற்றும் துணை முதல்வருமான நாராயண சுவாமி, கடந்த சனிக்கிழமையன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியபோது, புதிய கலால் சட்ட திருத்தத்தின் படி வரும் அக்டோபர் 1 முதல் அரசு மதுபானக் கடைகள் இயங்கும் என்றும், மேலும் ஆந்திரா மாநிலம் முழுவதும் 3,500 மதுபானக் கடைகள் இயக்கப்படும் என்றும், ஏற்கனவே ஒப்பந்தம் முடிந்த 475 தனியார் மதுக்கடைகள், செப்டம்பர் 1 முதல் அரசே மதுக்கடைகளை நிர்வகித்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த கடைகள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என்றும், மேலும் பார்கள் தற்போது இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. இதன் நேரத்தை குறைக்கவும் தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் நாரயணசுவாமி கூறியுள்ளார்.
இது தவிர கோவில், தேவாலயம், மசூதி, பள்ளிக்கூடம், கல்லூரி மடாலயம், போன்றவற்றிற்கு அருகில் உள்ள மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்றும், மக்கள் இது குறித்து ஏதேனும் ஆட்சேபனை தெரிவித்தால் புகார் அளிக்கலாம் என்றும், இதன் படி விசாரணை நடத்தி, அந்த குறிப்பிட்ட கடைகள் அகற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.
இது இப்படி எனில், இம்மாத தொடக்கத்தில் ஆந்திர அரசு மொத்தம் 4,380 மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை, 3,500 ஆக குறைக்கப்படும் என்றும், இறுதியில் படிப்படியாக இந்த கடைகள் அகற்றப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பெல்ட் கடைகளை நடத்துவதற்காக தற்போது வரை 2,872 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 2,928 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும் சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்தற்காக இதுவரை 4,788 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும், மேலும் இது குறித்து 2,834 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications