டெல்லி: இந்தியாவில் மாநில, கலாச்சார வேறுபாடுகள் இல்லாமல், சுமார் 95 சதவிகிதம் பேர் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் ஒரு காய்கறி என்றால் அது வெங்காயம் தான். சின்ன வெங்காயமோ பெரிய வெங்காயமோ, இந்தியாவில் பெரிய அளவில் பல தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த சில வார காலமாக வெங்காயத்தின் விலை விண்னைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. கிலோ 20 ரூபாய், 30 ரூபாய் விற்பனை ஆகி வந்த வெங்காயம் கடந்த சில வாரங்களாக 80 ரூபாய்க்கு மேல் எல்லாம் அசால்டாக விற்பனையாகி வருகிறது.
இன்று (செப்டம்பர் 29, 2019 ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்தியாவில் இருந்து, எந்த வகையான வெங்காயமும் ஏற்றுமதி செய்யப்படக் கூடாது என மத்திய வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகம் இன்று அறிவுறுத்தி இருக்கிறது. இந்த அறிக்கையை வெளிநாட்டு வர்த்தகத்தின் பொது இயக்குநர் அலோக் வர்தன் சதுர்வேதி வெளியிட்டு இருக்கிறார்.
மேலும், இந்த சிக்கலைத் தீர்க்க மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகள் வெங்காயத்தை வாங்கி மாநில மக்களுக்குத் தேவையான வெங்காயத்தைச் சப்ளை செய்யுமாறு சொன்னார் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுக்க வெங்காய சப்ளை பிரச்னையை சரி செய்ய, இரண்டு துணைச் செயலர் பதவியில் இருக்கும் அதிகாரிகளை, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அனுப்பி இருக்கிறார்களாம். இவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், வெங்காயத்தை போக்குவரத்து செய்யும் லாரி உரிமையாளர்கள் என பல தரப்பினரிடமும் பேசி வெங்காய சப்ளை எப்படி இருக்கிறது என மதிப்பிட இருக்கிறார்களாம். அதோடு அனைத்து தரப்பினரையும் அதிகம் வெங்காயத்தைக் கொண்டு வரவும் வலியுறுத்திச் சொல்ல இருக்கிறார்களாம்.
சமீபத்தில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னுடைய ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை வழங்கினார். ஆனால் இப்போது சுமாராக 600 மில்லியன் டாலர் வரை ஏற்றுமதி ஆகும் வெங்காயம் மற்றும் அதன் சார்ந்த, ஏற்றுமதிகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. என்ன செய்ய ஒரு பக்கம் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் இன்னொரு பக்கம், வெங்காயத்தைன் விலையையும் கட்டுப்படுத்த வேண்டுமே..!