டெல்லி: இந்த ஆண்டின் இறுதிக்குள் 1 பில்லியன் டாலர் வருவாய் ஈட்ட குரோஃபர்ஸ் (Grofers) திட்டம் போட்டு இருக்கிறது. இந்த ஒரு பில்லியன் டாலர் என்பது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என அனைத்து வழிகளில் நடக்கும் வியாபாரத்தைச் சேர்த்து அடைய வேண்டிய இலக்காக வைத்து இருக்கிறார்கள்.
குரோஃபர்ஸ் நிறுவனம் தொடக்கத்தில் ஒரு ஆன்லைன் மளிகைக் கடையாகத் தான் இருந்தது. இந்த 2019-ம் வருடத்தின் தொடக்கத்தில், குரோஃபர்ஸ் நிறுவனமும் சாதாரண மளிகைக் கடைகள் உடனும் கை கோர்த்து பணியாற்றிக் கொண்டிருப்பதாகச் சொன்னது. அதோடு இந்த சாதாரண மளிகைக் கடைகளை தங்களின் பிராண்ட் அவுட் லெட் போல மாற்ற, வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னது.

மளிகைக் கடைகளை தங்களின் பிராண்ட் அவுட்லெட்களாக பயன்படுத்த, டெல்லி பகுதியில் முதலில் 100 மளிகை கடைகளைச் சேர்த்தார்களாம். இப்போது சுமாராக அதே டெல்லி பகுதிகளில் 300 கடைகள் குரோஃபர்ஸின் இந்த திட்டத்தின் கீழ் இயங்கிக் கொண்டு இருக்கிறதாம். இந்த வருடத்தின் முடிவுக்குள் சுமார் 1,000 கடைகளையாவது, குரோஃபர்ஸின் பிராண்ட் அவுட் லெட்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் கொண்டு வர இருப்பதாகச் சொல்லி இருக்கிறார் குரோஃபர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் செளரப் குமார். இனி வரும் காலங்களில் இந்த குரோஃபர்ஸ் பிராண்ட் அவுட் லெட் திட்டத்தை மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கும் கொண்டு வர இருக்கிறார்களாம்.
மேலும் "நாங்கள் இந்த வருடத்துக்குள் 1 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டப் போகிறோம். எங்களின் ஜி பிராண்ட் பொருட்கள் வழியாக எங்களுக்கு 40 சதவிகிதம் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. வரும் ஆண்டுகளில், இந்த 40 சதவிகிதத்தை 60 சதவிகிதமாக உயர்த்த திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம். சாதாரண மளிகைக் கடைகளின் மூலமாகவும் வியாபாரம் செய்து வருவதால், எங்கள் ஜி பிராண்டின் விற்பனை அதிகமாகி இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார் குரோஃபர்ஸின் நிறுவனர் செளரப் குமார்.
சதாரண மளிகைக் கடைகளையும் குரோஃபர்ஸ் நிறுவனத்தின் சப்ளை வட்டத்தில் வைத்திருப்பதால், குரோஃபர்ஸின் வியாபாரம், அதிகரித்து இருக்கிறது. அடுத்து வரும் 30 - 36 மாதங்களுக்குள் இந்தியாவில் மட்டும் சுமாராக 50,000 மளிகைக் கடைகள் உடன் கரம் கோர்த்து வியாபாரம் செய்யப் குரோஃபர்ஸ் இலக்கு வைத்திருக்கிறார்களாம்.
குரோஃபர்ஸ் நிறுவனத்துடன் கை கோர்க்கும் மளிகைக் கடைகள், குரோஃபர்ஸின் ஜி பிராண்ட் பொருட்களை விற்ப்பார்கள். இந்த ஜி பிராண்ட் பொருட்கள் மற்ற பிராண்ட் பொருட்களை விட சுமார் 30 - 40 சதவிகிதம் விலை குறைவாக இருக்கும். தற்போது ஜி பிராண்டின் கீழ் உணவுப் பொருட்கள் தொடங்கி, எஃப் எம் சி ஜி வரை சுமார் 1,200 பொருட்கள் வருகிறதாம். இந்த பொருட்களின் எண்ணிக்கையும் வரும் 2020 ஆண்டு முடிவதற்குள் 1,500 பொருட்களாக அதிகரிக்கப் போவதாகவும் சொல்கிறார்கள் குரோஃபர்ஸ் தரப்பினர்கள்.


Click it and Unblock the Notifications