Anil Dhirubhai Ambani Group (ADAG) என்கிற பெயரில் அண்ணன் முகேஷ் அம்பானி உடன் சண்டை போட்டு பிரிந்து வந்து வியாபாரம் செய்யத் தொடங்கிய தம்பி அனில் அம்பானிக்கு கட்டம் கொஞ்சம் சரி இல்லை. திரும்பிய பக்கம் எல்லாம் நஷ்டம் தான்.
சமீபத்தில் கடனை அடைக்க சிரமப்பட்டது எல்லாம் போக, இனி தனக்கு இந்த கடன் கொடுக்கும் நிதி சார் வியாபாரமே வேண்டாம் என திறந்த வெளியில் வெளிப்படையாகப் போட்டு உடைத்து இருக்கிறார். அதோடு இனி ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், கடன் கொடுக்கும் வியாபாரத்தில் ஈடுபடாமல், வெறுமனே பங்குகளை வைத்திருக்கும் நிறுவனமாக இருக்கும் என ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சொல்லி இருக்கிறார் அனில் அம்பானி.
கடந்த ஆறு மாதங்களாக, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் பல சிக்கல்களைச் சந்தித்து இருக்கிறது என காரணங்களைப் பட்டியல் போடுகிறார். இந்திய வங்கித் துறைகளில் இருக்கும் சிக்கல்கள் தொடங்கி, ஆடிட்டர்களின் தவறான நடவடிக்கைகள், ரேட்டிங் நிறுவனங்களின் நடவடிக்கைகள், இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் மந்த நிலை பட்டியல் நீள்கிறது.
கடந்த 5 - 10 ஆண்டு காலமாக ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்துக்கு வர வேண்டிய சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அரசு நெறிமுறையாளர்களிடமும், நீதிமன்றங்களிடமும் சிக்கி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். கடந்த 15 மாதங்களில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் சுமாராக 35,000 கோடி ரூபாய் கடனை அடைத்து இருக்கிறது. அதோடு மேலும் சுமார் 15,000 கோடி ரூபாயை வரும் மார்ச் 2020-க்குள் அடைக்க இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இத்தனையும் எந்த ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் உதவி இல்லாமல் செய்து இருப்பதையும் அடிக்கோடு போட்டுச் சொல்லி இருக்கிறார் அனில் அம்பானி.
சமீபத்தில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் தன் வசம் வைத்திருக்கும், ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் 21.54 சதவிகித பங்குகளை, ஜப்பான் நாட்டின் நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் விற்று இருக்கிறார்களாம். இந்த டீலுக்காக நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்துக்கு சுமார் 3,030 கோடி ரூபாயைக் கொடுக்கப் போவதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இப்படி அனில் அம்பானி நிர்வகித்து வரும் ஒரு சில நல்ல வியாபாரங்கள் கூட சூழ்நிலையினால் சரியாகச் செய்ய முடியாமல் போய்விட்டது. மேற் கொண்டு கடன் வாங்கி, வியாபாரம் செய்ய விரும்பாமல், இனி நிதி சார்ந்த கடன் கொடுக்கும் வியாபாரமே வேண்டாம் எனச் சொல்லி ஒதுங்கி இருக்கிறார் போல தம்பி அனில் அம்பானி. அனில் அம்பானி தன்னை சரி செய்து கொண்டு வியாபாரத்தில் முன்னேற வாழ்த்துக்கள்.