ரகுராம் ராஜன். இந்தியாவில் ஆர்பிஐ ஆளுநர் என ஒரு பதவி இருக்கிறது. அது பெரிய பொறுப்பான பதவி. இந்தியாவில் இருக்கும் வங்கிகளை கண்காணித்து நல்வழிக்கு கொண்டு வரும் பதவி.
அந்த பதவியில் இருப்பவர் சரியாக வழி நடத்தினால் ஒட்டு மொத்த இந்தியாவின் பொருளாதார நிலையே மாற்றம் காணும் என வெகு ஜன மக்களுக்குத் தெரிய வந்தது ரகுராம் ராஜன் காலத்தில் தான்.
இவர் காலத்தில் ஒரு ஆர்பிஐ ஆளுநராக மத்திய அரசின் மிரட்டல்களுக்குப் பணியாமல், ஆர்பிஐ ஆளுநராக தன் வேலையை சிறப்பாக செய்த காரணத்தாலேயே மீண்டும் பதவி கொடுக்கவில்லை. அதோடு சுயமாக சிந்தித்து வேலை செய்பவர்களைத் தான் ஆளும் அரசுக்கு (யார் ஆண்டாலும்) பிடிக்காதே. சரி விஷயத்துக்கு வருவோம்.
ரகுராம் ராஜன் வருத்தம்
"அரசை விமர்சிக்கும் ஒவ்வொரு முறையும், விமர்சிப்பவருக்கு யாரோ ஒருவர் அரசு தரப்பில் இருந்து அழைத்து, அவர் சொன்ன கருத்துக்களை பின் வாங்கச் சொல்வது, அல்லது ஆளும் அரசின் ட்ரோல் ஆர்மியிடம் சொல்லி மோசமாக ட்ரோல் செய்வது போன்ற வேலைகளைச் செய்தால், பலரும் அரசை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்வார்கள்" என வருத்தமாகச் சொல்லி இருக்கிறார் ரகுராம் ராஜன். இதில் தான் நமக்கு சந்தேகமே வருகிறது.
மிரட்டலா
ரகுராம் ராஜன் தொடர்ந்து பாஜக அரசின் தவறான முடிவுகளை விமர்சிக்கத் தவறியது இல்லை. முன்னாள் ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா, விரால் ஆச்சார்யா ராஜினாமா, Foreign currency sovereign bond என பல விஷயங்களை நேரடியாகவும், கண்ணியமாகவும் விமர்சித்தவர், விமர்சித்து வருபவர் ரகுராம் ராஜன். இப்போது திடீரென ரகுராம் ராஜன் இப்படிச் சொல்வதற்கு காரணம் என்ன..? அவரையே ஆளும் அரசு மிரட்டியதா..? என்கிற கேள்வி எழுகிறது.
தவறு
ஒரு அரசு எந்த ஒரு விமர்சனத்தையும் எதிர் கொள்ளாமல் நல்ல படியாக நடத்திச் செல்வது போல நம்ப வைக்கலாம். ஆனால், அதிக நாட்கள், அந்த கசப்பான உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது எனவும் சொல்லி இருக்கிறார் ரகுராம் ராஜன். தொடர்ந்து விமர்சனங்களை அனுமதித்தால் தான் நம் கொள்கைகளில் அவ்வப்போது தேவையான மாற்றங்களைக் கொண்டு வர முடியும். அதோடு அரசு அதிகாரிகளும், ஆளும் அரசியல்வாதிகளிடம் உண்மையைச் சொல்ல முடியும் எனவும் சொல்லி இருக்கிறார்.
சவால்கள்
அதோடு விட்டாலும் பரவாயில்லை. "இன்று இந்தியா ஒரு பெரிய சவாலை சமாளித்து இருக்கிறது. தற்போதைய உண்மை நிலையை பொது மக்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் மறைப்பவர்கள், தங்களின் சின்ன சின்ன சாதனைகளையும் மிகப் பெரிய சாதனைகளைப் போல கோஷமிட்டுக் கொண்டு பெருமிதப்படுபவர்கள், சம நிலையற்ற தன்மை போன்றவைகளை சமாளிக்க வேண்டி இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார் ரகுராம் ராஜன்.
பாஜகவைச் சொல்கிறாரா
கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. ஆக அவர்களைத் தான் ரகுராம் ராஜன் சொல்கிறாரோ..? எனவும் தோன்றுகிறது. ஆனால் ரகுராம் ராஜன் சொன்ன வார்த்தைகளில், ஒரு இடத்தில் கூட பாஜகவையோ அல்லது பாரதிய ஜனதா கட்சி சம்பந்தப்பட்ட தலைவர்களையோ குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது. தங்களை எதிர்த்துப் பேசும் அனைவரையும் ஆண்டி இந்தியன் எனச் சொல்பவர்கள், இப்போது ஒரு பெரிய பொருளாதார நிபுணரையும் ஆண்டி இந்தியன் பட்டியல் சேர்க்கப் பார்த்திருக்கிறார்கள் போல. அதையும் ரகுராம் ராஜனே முன் வந்து இன்னார் என தெளிவு படுத்தினால் தான் உண்டு.
வெட்டிப் பெருமை
"இந்தியாவில், நம் வரலாற்றைப் பார்த்து, நாம் பெருமைப் படுவதற்கான ஆதாரங்களைத் தேடும் வழக்கம் இருக்கிறது. நம் வரலாற்றை அறிந்து கொள்வதில் தவறு இல்லை. ஆனால் வீண் பெருமை பேசுவதால் நமக்கு பாதுகாப்பு இல்லாமையும், நம் செய்ய வேண்டிய வேலைகளும் தான் பாதிக்கப்படும்" எனவும் தெளிவாகச் சொல்லி இருக்கிறார் முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன்.
பின் தங்கி விடுவோம்
மேலும் "வெளிநாட்டில் இருந்து போட்டி போடும் விதத்தில் நிறுவனங்கள் இந்தியாவுக்கு வந்தால், நம் இந்திய கலாச்சாரம், நம் சித்தாந்தங்கள், நம் நிறுவனங்கள் எல்லாம் அழிந்து விடும் என பாதுகாப்பு இல்லாத மன நிலையில் நாம் இருக்கக் கூடாது. குறிப்பாக நமக்கு நாமே ஒரு இரும்புத் திரையை போட்டுக் கொண்டால் நாம் உலகத்தோடு ஒட்டி வாழாமல், ஒரு சிறு காலணி போல் பின் தங்கி விடுவோம்" எனவும் சொல்லி இருக்கிறார் ரகுராம் ராஜன்.
ஏற்றுக் கொள்வார்களா..?
நாம் முன்பே சொன்னது போல, ரகுராம் ராஜன் யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்பதை இன்னும் தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் ஆளும் அரசு, பழைய பெருமைகளைப் பேசுவது, மக்களுக்கு தெரிய வேண்டிய விஷயங்களை வலுக் கட்டாயமாக மறைப்பது (உதாரணம் வேலை வாய்ப்பு விவரங்கள்) போன்றவைகளை எல்லாம் பாஜக தன் கடந்த ஆட்சிக் காலங்களில் செய்து இருக்கிறது, செய்து கொண்டு இருக்கிறது. ஆகவே பாஜகவை சொல்வதாக நமக்குத் தெரிகிறது. ரகுராம் ராஜன் சொல்வது போல கருத்துச் சுதந்திரம் இல்லை என்பதற்கு சமீபத்தில் ஷமிகா ரவி & ரதின் ராய் போன்றவர்களை பதவியில் இருந்து தூக்கியது ஒரு நல்ல சாட்சியாக இருக்கிறது.
ரீ வைண்ட் ப்ளீஸ்
இனியாவது ஆளும் வர்க்கம், மற்றவர்களைச் சுதந்திரமாக கருத்து சொல்ல விடுவார்களா..? அந்த கருத்துக்களை பரிசீலிப்பார்களா..? எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரகுராம் ராஜனைப் போல படித்தவர்கள், துறை சார் வல்லுநர்கள் சொல்வதைக் கேட்டால் அரசுக்கும், கட்சிக்கும், கடைசியாக மக்களுக்கும் நல்லது..! கேட்கவில்லை என்றால், மக்களுக்கு கெட்டது..! நம்பிக்கை இல்லையா..? மீண்டும் டீமானிட்டைசேஷன், புதிய இந்தியா, ஜிஎஸ்டி... என எல்லாவற்றையும் ரீ வைண்டில் போட்டுப் பாருங்கள்..!