உலக பொருளாதாரமே மந்த நிலையில் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபிக்கிறது 9,000 பேரின் வேலை இழப்பு. அதுவும் உலகின் முன்னணி நிறுவனத்தில் இருந்து.
எப்போதும் ஐடி துறையில் தான் வேலை இழப்புகள் சர்வ சாதாரணமாக இருந்தது. ஆனால் இப்போது, சாதாரண உற்பத்தி துறை தொடங்கி எல்லாவற்றிலும் இந்த வேலை இழப்பு அல்லது வேலையில் இருந்து மற்றவர்களை நீக்குவது பெரிய அளவில் அதிகரித்து இருக்கிறது.
அதற்கு சாட்சியாக உலகின் முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களைத் தயாரிக்கும் HP நிறுவனமும் தன் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறதாம்.
மறு சீரமைப்பு
HP நிறுவனத்தின் செலவுகளைக் குறைத்து, தங்கள் விற்பனையை அதிகரிக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள். அந்த திட்டத்தின் முதல் படியாக தன் மொத்த ஊழியர்களில் சுமார் 16 சதவிகிதம் பேரை ஈவு, இரக்கம் எல்லாம் பார்க்காமல், வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். ஒரு வருடம் முன்பு தான் HP நிறுவனம் தன்னிடம் சுமார் 55,000 பேர் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.
எத்தனை பேர்
ஆக 55,000 பேரில் சுமார் 7,000 முதல் 9,000 பேரை வீட்டுக்கு அனுப்பப் போகிறார்களாம். பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப 1. கட்டாய விருப்ப ஓய்வுத் திட்டம் (Voluntary Early Retirement) 2. கட்டாய வெளியேற்றம் (Firing) என இரண்டு வழிகளைக் கையாளப் போகிறார்களாம். இந்த நடவடிக்கையினால் HP நிறுவனத்துக்கு, வரும் 2022 நிதி ஆண்டுக்குள் சுமார் 1 பில்லியன் டாலர் வரை செலவு மிச்சம் ஆகும் என HP நிறுவனமே சொல்லி இருக்கிறது.
தலைமை மாற்றம்
கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து HP நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக Dion Weisler என்பவர் தான் தலைமை தாங்கி வழி நடத்தி வந்தார். வரும் நவம்பர் 01, 2019 அன்று இவர் ஓய்வு பெற இருக்கிறாராம். இவரைத் தொடர்ந்து Enrique Lores என்கிற நீண்ட நாள் HP ஊழியர் தான் இப்போது அடுத்த தலைவராக பதவி ஏற்கப் போகிறாராம். HP நிறுவனத்துக்கு நல்ல வருவாயையும் லாபத்தையும் கொடுத்துக் கொண்டிருந்த ப்ரிண்டிங் வியாபாரம் தற்போது மந்தமாகத் தொடங்கி இருக்கிறது என்பதும் இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.
அதிரடி
பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் HP நிறுவனத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க இருக்கிறோம். நாங்கள் முன்பே சொன்னது போல இன்னும் தைரியமான பல முடிவுகளை எடுக்க இருக்கிறோம்" என ஊழியர்களை இன்னும் பதற்றத்தில் தள்ளி இருக்கிறார் தலைவர் Enrique Lores. அதோடு இந்த திட்டத்தை வடிவமைக்க நிறைய நேரத்தை செலவழித்து இருக்கிறோம். இந்த திட்டத்துக்காக சுமார் 1 பில்லியன் டாலர் செலவாகும் எனவும் சொல்லி இருக்கிறார் புதிய சி இ ஓ.
எதிர்காலம்
HP நிறுவனம் தன்னுடைய இன்க் ஜெட் பிரிண்டர்களைக் களத்தில் இறக்கப் போகிறதாம். இந்த ப்ரிண்டர்களை மைக்ரோ ஃப்ளுய்டிக்ஸ் (microfluidics) என்றும் சொல்கிறார்கள். இந்த ரக பிரிண்டர்களை ஹெல்த் கேர் மற்றும் காஸ்மெடிக்ஸ் போன்ற துறைகளுக்கு விற்கத் தொடங்க இருக்கிறார்களாம். எனவே எங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது எனச் சொல்கிறார் புதிய முதன்மைச் செயல் அதிகாரியாக பதவி ஏற்க இருக்கும் Enrique Lores.
புதிய சி இ ஓ-க்கு வாழ்த்துக்கள். புதிய சி இ ஓ வீட்டுக்கு அனுப்ப இருக்கும் 9,000 பேரில் நம் பெயரோ நம் நண்பர்கள் பெயரோ நம் உறவினர்கள் பெயரோ இல்லாத வரை சந்தோஷம். ஆனால் இந்த வேலை இழப்பு கொடுக்கும் பதற்றத்தை நம்மால் தவிர்க்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications