டெல்லி : இ-காமர்ஸ் நிறுவனங்கள் அவ்வப்போது ஆஃபர்களை அள்ளித் தெளிப்பதும், பின் விற்பனையில் கள்ளா கட்டுவதும் வழக்கமான நிலை தான். ஆனால் இந்த திருவிழா பருவத்தில், இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மந்த நிலையில் இருக்கும் இந்த நிலையில், விற்பனை எப்படி இருக்குமோ என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், வழக்கம் போல இவ்விரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வாரி வழங்கின.
இந்த நிலையில் இந்த பண்டிகைக்கு முன்னதான விற்பனையில், விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் நல்ல வரவேற்பு இருந்ததாகவும் கூறியுள்ளன இந்த இரு நிறுவனங்களும்.
குறிப்பாக ஸ்மார்ட்போன் மற்றும் பேஷன் துறையில் விற்பனை உயர்ந்திருப்பதாகவும் இவ்விரு நிறுவனங்களும் கூறியுள்ளன.
விழாக்கால விற்பனை
வழக்கமாக இந்த விழாக்கால விற்பனை பருவத்தில், விற்பனை சராசரி நேரங்களை விட அதிகரிக்கும் என்று ஏற்கனவே இந்த நிறுவனங்கள் கூறியிருந்த நிலையில், கடந்த வெள்ளிகிழமையன்று முடிவடைந்த இந்த திருவிழாக் கால விற்பனை சலுகையில், இந்த இரு நிறுவனங்களும், அதிகளவிலான தேவை இருந்ததாகவும், குறிப்பாக டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக ஸ்மார்ட்போன்களுக்கும் பேஷன் துறையிலும் விற்பனை களைகட்டியதாகவும் கூறியுள்ளன.
இந்த விழாக்கால சலுகை எப்போது?
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையும், அமேசானின் தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சீசனும் கடந்த செப்டம்பர் 28 அன்று இரவு ஆரம்பித்த நிலையில், பிரிமியம் உறுப்புனர்களுக்கு முன்னதாகவே இந்த சலுகையை விற்பனையை இந்த இரு நிறுவனங்களும் ஆரம்பித்தன. இந்த நிலையில் குறிப்பாக டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில், சில வகுப்புகளில் விற்பனை இரு மடங்காக அதிகரித்ததாகவும் கூறியுள்ளது. இந்த விழாக்கால விற்பனையில், மொத்த விழாக்கால சந்தை 70 - 75% விற்பனை இருக்கும் என்றும் நம்புவதாகவும், இதில் 50-60% புதிய வாடிக்கையாளர்கள் என்றும் இந்த நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
என்ன சொல்கிறது பிளிப்கார்ட்
இது குறித்து பிளிப்கார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆறு நாட்களில் மட்டும் பிளிப்கார்ட் 70 பில்லியன் பேரை பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளது. இதே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமேசான், ஸ்மார்ட்போன் மற்றும் பேஷன் துறையில் முறையே 15 மடங்கு மற்றும் 5 மடங்கு விற்பனையை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பெரிய அளவிலான உபகரணங்கள் விற்பனை 8 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இவற்றில் பாதிக்கும் கீழ் அடுக்கு நகரங்களில் இருந்து வந்ததாகவும் கூறியுள்ளன.
அமேசான் நல்ல வளர்ச்சி
இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆஃபரில், இந்தியாவில் உள்ள அனைத்து சந்தைகளிலும் வாடிக்கையாளர்களையும் வாங்குதல்களையும் பரிவர்த்தனை செய்வதில் அதிக பங்கை கொண்டது. சுமார் 500 நகரங்களில் இருந்து, 65,000 மேற்பட்ட விற்பனையாளர்கள் ஆர்டர்களை பெறுகிறார்கள் என்றும் அமேசான் கூறியுள்ளது. ஒரு புறம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவங்களால் சிறு வர்த்தகர்கள் பயனடைந்தாலும், உள்நாட்டு சில்லறை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதும் உண்மையே.