மும்பை : இந்திய வங்கி முறைகள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக மக்களிடையே கருத்துகள் நிலவி வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம், இந்திய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் தொடர்ந்து நிலையானதாக உள்ளது என கூறியுள்ளார்.
மேலும் விரைவில் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் குறித்த விதிமுறைகளை மறுபரிசீலனை செய்து அரசுடன் ஆலோசனை நடத்தப்போவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய தாஸ், கூட்டுறவு வங்கிகளின் பராமரிப்பு பற்றிய கேள்விகளுக்கு ஆர்பிஐ எந்த கூட்டுறவு வங்கியும் நிலைகுலைவதை அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்.
மேலும் சிறந்த கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாகத் திகழும் பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்திருப்பது பற்றி கேட்டபோது, இதைப் பற்றி விசாரணை நடந்து வருகிறது என்றும், மேலும் பொருளாதாரக் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரனை நடந்து வருகிறது என்றும் கூறியுள்ளார். இது தவிர கூட்டுறவு வங்கிகளின் பராமரிப்பு சிறப்பாகவே உள்ளது என்றும், ஒரு சம்பவத்தை வைத்து, மற்ற அனைத்து கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளையும் குறை கூறிவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஆர்பிஐ கூட்டுறவு வங்கிகளின் அனைத்து விதிமுறைகளையும் மறுபரிசீலனை செய்து, தேவைப்பட்டால் அரசுடனும் கலந்தாலோசிப்போம் எனவும் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நிதித்துறை விவகாரங்கள் பற்றி கேட்டபோது, தற்போது வரை ரிசர்வ் வங்கி கவனமாகவே இருந்து வருகிறது என்றும், வங்கி அமைப்பு சிறப்பாகவும் நிலைத்தன்மையோடும் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். அச்சப்படுவதற்கான காரணமே இதில் இல்லை எனவும் வதந்திகளை அறிந்து, யாரும் பயப்பட வேண்டும் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த தேவையற்ற வதந்திகள் பீதியை உண்டாக்கும் என்றும், அவை குறித்து யாரும் கவனம் செலுத்த வேண்டாம் என்றும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பி.எம்.சி வங்கி, முறைகேடு செய்யப்பட்டதாக தெரிந்த நிலையில், ரிசர்வ் வங்கி மிக விரைவாகவும், உடனடியாகவும் செயல்பட்டதாகவும் தாஸ் கூறியுள்ளார். தற்போது பி.எம்.சி வங்கியில் பணம் எடுக்கும் வரம்பை தற்போது 25,000 ரூபாயாக அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.