இந்தியாவில் செல்ஃபோன், டெலிஃபோன் போன்ற வார்த்தைகள் வந்தால் அதோடு அரசு நடத்தி வரும் BSNL மற்றும் MTNL போன்ற நிறுவனங்களின் பெயர்களும் தானாகவே நினைவுக்கு வரும்.
1990-களில், இந்தியா தனியார்மயம், உலகமயம், தாராளமயக் கொள்கைகளைக் கொண்டு வரும் போது, இந்தியாவின் டெலிகாம் துறையும் தனியாருக்கு திறந்து விடப் பட்டது.
விளைவு, அரசு நிறுவனங்களான BSNL மற்றும் MTNL போன்றவர்களால் தற்போது தனியார் நிறுவனத்துடன் போட்டி போட முடியவில்லை.
மூடுவிழா
தனியார் நிறுவனங்களுடன் BSNL மற்றும் MTNL போட்டி போட முடியவில்லை என மக்களோ அல்லது துறை சார் வல்லுநர்களோ சொன்னால் பரவாயில்லை. இப்போது அரசே அந்த பொன்னான வார்த்தைகளை உதிர்த்து இருக்கிறது. ஆம் மத்திய நிதி அமைச்சகம் BSNL மற்றும் MTNL நிறுவனங்களை மூடச் சொல்லி பரிந்துரையே செய்து இருப்பதாக ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
செலவு
பலரின் நினைவுகளை மீட்டும் இந்த BSNL மற்றும் MTNL போன்ற அரசு நிறுவனங்கள் இரண்டையும் முழுமையாக மூட சுமார் 95,000 கோடி ரூபாய் செலவு ஆகலாம் என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை ஒரு கணிப்பையும் வெளியிட்டு இருக்கிறது. இந்த பணத்தை வைத்துக் கொண்டு, BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு இருக்கும் கடன்கள் மற்றும் ஊழியர்களுக்கான செட்டில்மெண்ட் செலவுகளைத் தான் செய்யப் போகிறார்களாம்.
மறுப்பு
இதற்கு முன்பே, மத்திய அரசின் கட்டுப்பாடில் இயங்கு வந்த BSNL மற்றும் MTNL தங்கள் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள சுமார் 74,000 கோடி ரூபாய் முதலீடு செய்யச் சொல்லி, மத்திய அரசிடமே கேட்டது. ஆனால் மத்திய அரசு அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க மறுத்துவிட்டது என்பதும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது. அரசே துணிந்து முதலீடு செய்து தங்கள் நிறுவனத்தை மேலே கொண்டு வர முடியாமல் கைவிட்டால் பின் மூடாமல் என்ன செய்ய முடியும்..?
3 வகை ஊழியர்கள்
தற்போது BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்களில் 3 வகையான ஊழியர்கள் இருக்கிறார்களாம்.
முதல் வகை: BSNL மற்றும் MTNL நிறுவனங்களே நேரடியாக ஊழியர்களை வேலைக்கு எடுத்தவர்கள்.
இரண்டாம் வகை: மற்ற அரசு நிறுவனங்களில் இருந்து BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டவர்கள்.
மூன்றாம் வகை: இந்திய தகவல் தொழில்நுட்ப சேவை (ITS - Indian Telecommunication Service) அதிகாரிகளாக பதவிக்கு வந்தவர்கள்.
என்ன ஆகும்
ஐடிஎஸ் தேர்வு எழுதி தற்போது BSNL மற்றும் MTNL நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வேறு அரசு துறைகளில் பதவியைக் கொடுத்து விடுவார்கள். அதே போல் BSNL மற்றும் MTNL நிறுவனங்களே நேரடியாக வேலைக்கு எடுத்தவர்கள் மற்றும் அரசு பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து மாற்றல் செய்யப்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு தான் தற்போது கேள்விக் குறியாக இருக்கிறது.
கணக்கு
தற்போது மத்திய அரசு, BSNL மற்றும் MTNL ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் ஒவ்வொரு பிரிவு வாரியாக ஊழியர்கள் எண்ணிக்கை மற்றும் சம்பள விவரங்களைக் கேட்டு இருக்கிறார்களாம். இந்த கனக்குகளை வைத்து தான் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கும் போது கடைசி செட்டில்மெண்ட்களை வழங்கப் போகிறார்களாம். ஆக கிட்ட தட்ட மத்திய அரசின் கீழ் இயங்கு வந்த BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்துவது உறுதி ஆகி இருக்கிறது. ஆனால் இதுவரை BSNL மற்றும் MTNL ஆகிய நிறுவனங்களிடம் இருந்து இது குறித்து எந்த ஒரு விவரங்களும் வரவில்லை.