பெங்களுரு : கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு தொடக்கம் வரை காக்ணிசன்டின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் தான் பிரான்சிஸ்கோ டிசோசா. இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 1,350 கோடி ரூபாய் (191.4 மில்லியன் டாலர்) மொத்தம் வருமானமாக பெற்றுள்ளார்.
வெறும் 12 வருடத்தில் 191.4 மில்லியன் டாலர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மைதான். இந்த நிறுவனத்தில் வேலை செய்ததற்கு சம்பளம், மற்றும் ஸ்டாக் ஆப்ஷன் வழியாக பெற்ற பங்குகள் மூலம் இவ்வளவு பெரிய தொகை வந்து இருப்பதாக ஈக்விலர் (Equilar) என்கிற ஆய்வு நிறுவனத்தின் ப்ளாக் ஸ்பாட்டில் சொல்லி இருக்கிறார்களாம்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈக்விலார் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் நோல்டனின் கூற்றுப்படி, காக்ணிசன்ட் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையின் படி, டிசோசா 104.3 மில்லியன் டாலர் தான் பெற்றார், ஆனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை நல்ல ஏற்றம் கண்டதால், அவரின் இழப்பீடும் நன்றாக அதிகரித்து இருக்கிறது என்று கூறியுள்ளார்.
கடந்த 2016ன் படி, டிசோசாவுக்கு கொடுத்ததாக சொல்லப்பட்ட ஊதியம் 8.3 மில்லியன் டாலராகவும், ரியலைஸ்டு ஊதியம் 32.9 மில்லியன் டாலராகவும் இருக்கிறது. இது இவர் தலைமை அதிகாரியாக இருந்த காலத்தில் இரண்டாம் ஆண்டை தவிர, ஒவ்வொரு ஆண்டும், டிசோசா அவர்கள் வாங்கிய் ஊதியத்தை விட ரியலைஸ்டு ஊதியம் என்பது மிக அதிகமாகவே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவெனில் பிரான்சிஸ்கோ டிசோசா தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில் தன், காக்னிசன்ட் நிறுவனத்தின் வருவாய் விப்ரோ மற்றும் இன்போசிஸின் வருமானத்தை விட அதிகமாக கண்டது. இதனால் தான் பங்கு விலையும் நன்கு அதிகரித்ததோ என்னவோ தெரியவில்லை.
அதிலும் மார்ச் 2018ல், இந்த நிறுவனத்தின் பங்கின் விலை ஒரு உச்சத்தை தொட்டது என்றே கூறலாம்.
டிசோசாவுக்கு வழங்கப்பட்டு வந்த சம்பளம் மற்றும் பங்கு ஒதுக்கீடுகள், அவரின் செயல்பாடுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கிறது. எனவே அவருக்கான பங்கு ஒதுக்கீடுகள், இந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்க வேண்டி இருக்கிறது.
பொதுவாக ஐ.டி துறையில் உள்ள மூத்த அதிகாரிகளுக்கு, இழப்பீடாகவும், போனஸ் சலுகையாகவும், ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், அதிலும் நீண்டகாலம் இருக்கும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற காம்பன்சேஷன்களைக் கொடுப்பார்கள். குறிப்பாக இது போன்று பங்குகளை தருவது வழக்கம் தான்.
அந்த பங்குகளே தற்போது குறிப்பிடத்தக்க சொத்தாக மாறுவதும், இதனால் சில மூத்த அதிகாரிகள் நல்ல லாபம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் டிசோசா 12 ஆண்டுகளில், இந்திய மதிப்பில் சுமார் 1,350 கோடி ரூபாய்க்கு சொந்தக்காராக மாறியுள்ளார் என்பதை நாம் புரிந்து கொள்ல வேண்டும்.