டெல்லி: 2019-ம் ஆண்டில் தொடக்கத்தில் இருந்து, இந்திய ஆட்டோமொபைல் துறை பற்றிய செய்திகள் எப்போதும் மக்கள் கவனத்தில் இருந்து வருகிறது. தொடர்ந்து பல வேலை இழப்புகள் நம்மை பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றன. ஏன்..?
இந்திய ஆட்டோமொபைல் துறையை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 கோடி பேர் வாழ்ந்து வருகிறார்கள். இந்திய உற்பத்தித் துறையில் சுமார் 45 சதவிகிதம் பங்களிப்பது ஆட்டோமொபைல் துறை தான்.
இந்த ஒரு துறை மட்டும் இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 7.5 சதவிகிதம் வரை பங்களித்து வருகிறார்கள். இவ்வளவு பெரிய துறையிலேயே தொடர்ந்து வேலை இழப்புகள், வேலை இல்லா நாட்கள் எல்லாம் வந்தால் பயப்படாமல் என்ன செய்வது..?
சார்பு துறை
ஆட்டோமொபைல் என்கிற ஒரு துறையைச் சார்ந்து பெட்ரோல் போன்ற எரிபொருள் விற்பனை, இன்சூரன்ஸ், மெக்கானிக்குகள், வாகனங்களுக்கு கடன் கொடுக்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் என கணக்கில் வராத இன்னும் பல லட்சம் பேரின் வேலை வாய்ப்பும் இந்த ஆட்டோமொபைல் துறையைத் தான் நம்பி இருக்கிறது. இந்த துறை தொடர்ந்து சரிவதால் எத்தனை பேருக்கு வேலை பறி போகப் போகிறது என சில நிறுவனங்கள் தங்கள் கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த கணிப்பை பார்ப்பதற்கு முன், முதலில் இந்திய ஆட்டோமொபைல் துறையின் சரிவின் ஆழத்தைப் பார்ப்போம்.
சரிவு தான்
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று வெளியிட்டு இருக்கும் கணக்கைப் பாருங்கள். இந்த செப்டம்பர் 2019-ல் பயணிகள் வாகனம் மொத்தம் 2,23,317 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம். கடந்த செப்டம்பர் 2018-ல் இதே பயணிகள் ரக வாகனங்களின் விற்பனை அளவைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. மொத்தம் 2,92,660 வாகனங்களை செப்டம்பர் 2018-ல் விற்று இருக்கிறார்கள். ஆக செப்டம்பர் 2018 உடன் செப்டம்பர் 2019-ஐ ஒப்பிடும் போது, 23.7%சரிவை சந்தித்து இருக்கிறது.
கார் விற்பனை 33% டவுன்
பயணிகள் வாகனத்தில் கார்கள் விற்பனை எப்படி இருக்கிறது எனப் பார்த்தால் அங்கும் சரிவு தான். உள்நாட்டில் விற்பனையான கார்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த செப்டம்பர் 2019-ல் 1,31,281 கார்களைத் தான் விற்க முடிந்து இருக்கிறதாம். கடந்த செப்டம்பர் 2018-ல் 1,97,124 கார்களை விற்று இருந்தார்களாம். ஆக கார்கள் விற்பனை கடந்த ஒரு வருடத்தில் 33.4 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. உள்நாட்டில் கார்கள் விற்பனை தான் மந்தம் என்று பார்த்தால் இருசக்கர வாகனங்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது
இரு சக்கர வாகனம் 22% அவுட்
இந்தியாவில், கடந்த செப்டம்பர் 2019-ல் மொத்தம் 16,56,774 இரு சக்கர வாகனங்களை விற்று இருக்கிறார்கள். ஆனால் அதற்கு முந்தைய செப்டம்பர் 2018-ல் ஒட்டு மொத்தமாக 21,26,445 இரு சக்கர வாகனங்கள் விற்கப்பட்டு இருக்கின்றன. ஆக இதிலும் சுமார் 22 சதவிகிதம் சரிவு கண்டு இருக்கிறது. சரி பயணிகள் வாகனம், கார், இரு சக்கர வாகனங்கள் எல்லாமே விற்பனை சரிந்து இருக்கிறது கண ரக வாகனங்கள் விற்பனை என்ன என்று பார்த்தால் அங்கும் சோகம் தான்.
கண ரக வாகனங்கள் 39% காலி
இந்தியாவில் செப்டம்பர் 2019-ல் லாரி, ட்ரக்குகள், டிப்பர்கள் போன்ற கண ரக வாகனங்கள் மொத்தம் 58,419 விற்று இருக்கிறார்களாம். ஆனால் கடந்த செப்டம்பர் 2018-ல் 95,870 கண ரக வாகனங்களை விற்றார்களாம். ஆக இந்த ஒரு துறையில் மட்டும் சுமார் 39 சதவிகிதம் விற்பனைச் சரிவைச் சந்தித்து இருக்கிறது இந்திய ஆட்டோமொபைல் துறை. இந்தியாவின் முன்னணி கண ரக வாகன தயாரிப்பாளர்களான அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு இதனால் பலத்த அடி வாங்கி இருக்கிறார்கள்.
ஒட்டு மொத்த சரிவு 22%
ஆக பயணிகள் வாகனம், கண ரக வாகனம், இரு சக்கர வாகனம் என அனைத்து ரக வாகனங்களையும் சேர்த்தால், இந்தியாவில் கடந்த செப்டம்பர் 2019-ல் 20,04,932 வாகனங்களைத் தான் விற்று இருக்கிறார்களாம். செப்டம்பர் 2018-ல் 25,84,062 வாகனங்கள் விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் இந்திய ஆட்டோமொபைல் துறையின் விற்பனை சுமார் 22.4 சதவிகிதம் சரிவைச் சந்தித்து இருக்கிறது.
வேலைவாய்ப்பு சிக்கல்கள்
ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் துறையில் சுமார் 275 டீலர்கள் தங்களால் விற்பனை சரிவு சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல் கடையை மூடிவிட்டார்கள். இதனால் சுமார் 30,000 பேர் தங்கள் வேலையை இழந்தார்கள். மாருதி சுசூகி சுமார் 3,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு வேலை இல்லை என வீட்டுக்கு அனுப்பியது. அசோக் லேலண்ட் தன் உற்பத்தி ஆலைகளில் சுமார் 10 - 15 நாட்கள் வேலை இல்லா நாட்களாக அறிவித்தார்கள். இதெல்லாம் கொசுறு என்பது போல் ஆட்டோமொபைல் உதிரி பாக உற்பத்தி நிறுவனங்களில் கொத்து கொத்தாக ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பபட்டார்கள்.
உதிரி பாக நிறுவனங்கள்
Automotive Components Manufacturers Association of India (ACMA) கணிப்பின் படி, ஏற்கனவே கடந்த சில மாதங்களில் இந்திய ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்களில் சுமார் 1,00,000 பேருக்கு வேலை பறி போய்விட்டதாகவும், மேற்கொண்டு, இந்திய ஆட்டோமொபைல் துறையில், இதே மந்த நிலை நீடித்தால், அடுத்த 3 - 4 மாதங்களில், மேலும் 10 லட்சம் பேர் வரை தங்கள் வேலையை இழக்க வாய்ப்பு இருப்பதாக ACMA இயக்குநர் வின்னி மேத்தா சொல்லி இருந்ததும் தானாகவே நினைவுக்கு வருகிறது.
Team lease
இந்தியாவின் முன்னணி மனித வள மேம்பாட்டுத் துறை நிறுவனமான Team lease "இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சுமார் 10 சதவிகிதம் ஊழியர்கள் தொடர்ந்து வேலையில் இருந்து நீக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்" எனச் சொல்லி இருந்தது. இந்த காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர் 2019) சுமார் 5 லட்சம் பேர் இந்த ஆட்டோமொபைல் துறையில் தங்கள் வேலையை இழக்கலாம் எனச் சொல்லி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான இந்த மந்த நிலை சுமார் 6 - 9 மாதங்கள் வரை தொடரலாம் எனவும் சொல்லி இருந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி இருக்கிறது.
நிர்மலா சீதாராமன்
தொடர்ந்து நிலைமை மோசமாகிக் கொண்டே வருவதால் ACMA மற்றும் Team Lease சொன்னது நடக்கும் வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் நம் நிதி அமைச்சரோ, ஆட்டோமொபைல் துறையில் நிலைமை இன்னும் சீர் அடையவில்லை. இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு ஏதாவது தேவை என்றால் என்னை எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்துப் பேசலாம் எனச் சொல்லி இருக்கிறார். திறந்த மனதுடன் பேச அழைப்பதை வரவேற்கிறோம். ஆனால் கொள்கை ரீதியாகவும், விதிமுறைகள் படியும் இந்திய ஆட்டோமொபைலை தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்பு, அரசுக்கு தானே இருக்கிறது..? அரசு அதை செய்யும் என நம்புகிறோம்.
சுப்ரமணியம் சுவாமி
இந்த நேரத்தில் சுப்ரமணியம் சுவாமி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது. "கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை கொடுத்தால் சப்ளை அதிகரிக்கும். வருமான வரியை ஒழித்தால் தான், மக்களிடம் இருந்து வர வேண்டிய தேவை அதிகரிக்கும்". வருமான வரியை ஒழித்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் அதற்கு சமமாக எதையாவது செய்தால் தான், இந்தியாவில் தற்போது டிமாண்ட் அதிகரிக்கும் போலத் தான் தெரிகிறது. 4 கோடி பேருக்கு வேலை கொடுக்கும் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு, என்ன செய்யப் போகிறது இந்த அரசு.