டெல்லி : இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு ஜிஎஸ்டியும் ஒரு முக்கியக் காரணம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் பிபேக் தேப்ராய் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் எதிர்பார்த்த அளவை விட குறைவாக உள்ளது என பல தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
பொருளாதார வளர்ச்சி ஆறு வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில், வருமான வரிகளை கணிசமாகக் குறைப்பது, தேவையை தூண்டுவதற்கும் உதவும் என்றும் கூறியுள்ளார்.
இலக்கை அடைவது கடினம்
இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டி அமலாக்கம் ஒரு முக்கிய காரணம் என்று தான் நம்புவதாக தேப்ராய் கூறியுள்ளார். மற்றொரு முக்கிய காரணம் உலகளாவிய மந்த நிலை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் நிதிப்பற்றாக் குறையை என்னவாக இருக்கும் என்று கூற மறுத்துவிட்டார். ஆனால் வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதால் பிப்ரவரியில் பட்ஜெட் அறிவிக்கப்பட்ட போது கணிக்கப்பட்டதை விட குறைவாக இருப்பதாக, நிதிப் பற்றாக்குறை தவிர்க்க முடியாது உயரும் என்றும் கூறியுள்ளார். இந்த எண்ணிக்கையானது என்னவென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவது கடினம் என்றும் தேப்ராய் கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்
இதே ஜிஎஸ்டி பற்றி பேசியவர், ஜிஎஸ்டி வரி வசூல் குறைந்து கொண்டே போகிறது என்றாலும், மேலும் வரியை குறைக்க வேண்டும்; அதற்கு இதுவே சரியான தருணம். நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.3 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதை அடைவது மிகவும் கடினம் என்றும், தனிநபர் வருமான வரியை அரசு கண்டிப்பாகக் குறைக்கும் எனவும் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மந்த நிலைக்கு ஜிஎஸ்டியும் ஒரு காரணம்
மேலும் ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்ட விகிதமானது பொருளாதார வளர்ச்சிக்கு கைக் கொடுக்கவில்லை என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை சதவிகித அடிப்படையில் எவ்வளவு தட்டிச் சென்றது என்று மதிப்பிடுவது கடினம் என்றும், எனினும் நிலவி வரும் மந்த நிலைக்கு ஜிஎஸ்டி செயல்படுத்தப்பட்ட விதமும், ஒரு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பிரச்சனை இல்லை
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பிரச்சனை இல்லை என்று கூறியவர், ஜி.எஸ்டி அமலாக்கத்தால் இன்னும் நீண்டகாலமாக பிரச்சனை தொடர்ந்து இருந்து வருகின்றன என்றும், இதனால் ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி வெறும் 6 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்றும் கணித்துள்ளார். அதிலும் கடந்த முதல் காலாண்டிலேயே ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவிகிதமாக வளர்ச்சி விகிதம் பதிவாகியிருந்தது என்றும், அதே நேரத்தில் இரண்டாவது காலாண்டில் வெளியிடப்பட்ட விரிவாக்கத்தை விட சிறப்பாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச பொருளாதார நிலையும் ஒரு காரணம்
தொடர்ந்து நிலவி வரும் சர்வதேச பொருளாதார மந்த நிலையால், உலகப் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்து வருவதாக சரவதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இப்பிரச்சனை இல்லாவிடில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவிகிதமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இவர் மட்டுமல்ல பல்வேறு பொருளாதார ஆலோசகர்களும் நிபுணர்களும் பொருளாதார மந்த நிலையை தொடர்ந்து எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கார்ப்பரேட் வரி குறைப்பு கைகொடுக்காது
சமீபத்தில் மத்திய அரசு வளர்ச்சியை ஊக்கப்படுத்த கார்ப்பரேட் வரி குறைப்பை செய்தது குறிப்பிடத்தக்கது. இது அன்னிய முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக முதலீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்ட நிலையில், இந்த கார்ப்பரேட் வரி விகித குறைப்பானது எதிர்பார்க்கும் அளவு கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், மாறாக வளர்ச்சியினை அதிகரிப்பதில் இது தீவிரமாக இருந்தது என்பதற்காக சமிக்கையாகவே இது கருதப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் 2020 பட்ஜெட்டுக்குள் அரசு சில நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும், ஆனால் அதை குறிப்பிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.
பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கப்படுவரா?
முன்னதாக மோடி அரசின் தவறான கொள்கையால் விளைந்த பொருளாதார மந்த நிலையை சுட்டிக்காட்டும் அதிகாரிகள், உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்கம் செய்யும் வேலையை மோடி அரசு தொடர்ச்சியாக செய்து வரும் நிலையில், ஷமிகா ரவி மற்றும் ரத்தின் ராய் ஆகியோர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது பிபேக் தேப்ராயும் உண்மையை பேசியுள்ள நிலையில், இனி என்ன நடக்குமோ என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.