டெல்லி : பொதுத்துறை வங்கிகள் கடந்த அக்டோபர் 1 முதல் 9 வரையிலான இடைப்பட்ட, 9 நாட்களில் 81,781 கோடி ரூபாய் கடனை லோன் மேளா மூலம் கொடுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய செயலாளர், பின்னர் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், மத்திய அரசு பொருளாதாரத்தினை ஊக்குவிப்பதற்காக இந்த லோன் மேளாக்களை நடத்த கூறப்பட்ட நிலையில், இந்த ஒன்பது நாட்களில் 34,342 கோடி ரூபாய் கடன், புதிய தொழில் முனைவோருக்கான கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கடன்கள் வேகமாக கொடுக்கப்பட்டாலும், வங்கிகள் விவேகமான விதிமுறைகளை பின்பற்றியதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து வங்கிகளில் போதுமான பணப்புழக்கம் இருப்பதாகவும், மேலும் அதற்கான முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது என்றும், இதனால் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன் பெற்றுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் கூறியுள்ளார்.
மேலும் நிலவி வரும் மந்த நிலையை போக்க அரசு மேற்கொண்டுள்ள செயல்களில் ஒன்று தான் இந்த கடன் மேளா என்றும், மேலும் இது போன்றதொரு கடன் மேளா தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 21 - 25ம் தேதி நடைபெறும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
முன்னதாக தீபாவளியையொட்டி பண்டிகை செலவு, வீடு வாங்குதல், வாகன கடன் போன்றவற்றுக்கு கடன் வழங்க முகாம்கள் நடத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்ததும், குறிப்பாக பண்டிகை காலத்தில் பணம் தேவைப்படுபவர்களுக்கு கடன் கொடுத்து பணப்புழக்கம் ஏற்படுத்தக்கூடிய வங்கி அல்லாத நிதி நிறுவனங்களையும் வங்கிகள் அடையாளம் கண்டுள்ளன. இந்த நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் தேவைப்படும் பொதுமக்களுடன் 400 மாவட்டங்களில் கடன் முகாம்கள் நடத்த பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் படி முதல் கட்டமாக நடத்தப்பட்ட இந்த மேளாவில் 81,781 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாக வரவிருக்கும் இரண்டாவது லோன் மேளாவிலும் நல்ல வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications