டெல்லி : இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி நிறுவனத்துக்குச் சொந்தமான பொதுப்பங்குகள் வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே 81 சதவிகிதம் வரை வாங்கப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில், இன்று பங்கு வர்த்தகத்தில் அறிமுகமான முதல் நாளிலேயே நல்ல லாபத்தினை கொடுத்துள்ளது இந்த பங்கு. சுமார் அறிமுக விலையிலிருந்து கிட்டதட்ட 100 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது.
சுமார் மதியம் 12 மணியளவில் இது 125% ஏற்றம் கண்டு 721 ரூபாயாக வர்த்தகமாகியும் வருகிறது.
இந்திய ரயில்வே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி திரட்டுவதற்காக ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனத்தின் 12.6 சதவிகிதம் பங்குகளை பொதுப்பங்காக வெளியிட்டது. இவ்வாறு வெளியிடப்படும் 12.6 சதவிகிதம் பங்குகளில், 2 கோடி பங்குகள் அடங்கும் என்றும், இந்த நிலையில் முதல் நாளிலேயே 1.63 கோடி பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கினர் என்றும் செய்திகள் வெளியானது. இதில் நிறுவனம் சாராத முதலீட்டாளர்கள் 21 சதவிகிதம் பங்குகளையும், தனிநபர் சில்லறை முதலீட்டாளர்கள் 2.23 சதவிகிதம் பங்குகளையும் பெற்றுள்ளனர்.
ஒரு பங்கின் விலை 315 ரூபாய் முதல் 320 ரூபாய் வரை உள்ள நிலையில், சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் சம்பளப் பணியாளர்களுக்கு பங்கின் விலையில் 10 ரூபாய் சலுகை உண்டு.
பங்கு விலை 315 ரூபாய்க்கு விற்கப்படுவதால் 635.04 கோடி ரூபாய் திரட்ட முடியும் எனவும் 320 ரூபாய்க்கு விற்றால் 645.12 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் அரசு எதிர்பார்க்கிறது என்றும் முன்னரே கூறப்பட்டது.
இந்த நிலையில் இது இந்திய ரயில்வே அளித்துள்ள மிகப்பெரிய பொதுப்பங்கு வெளியீடு என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் லாபகரமாக இயங்கி வரும் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என முதலீட்டு ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வருகின்றன. ஆனால், மத்திய ரயில்வே எடுக்கும் கொள்கை முடிவுகள் பங்குகளை பாதிக்கக்கூடும் என்றும் நீண்டகால முதலீட்டுக்கு இந்தப் பங்குகளைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது எனவும் கூறி வருகின்றனர்.
ரயில் கட்டணம் மற்றும் இரண்டு வழித்தடங்களை தனியார்மயமாக்குவதால் நிறுவனத்தின் வருவாய் அடுத்த 1 - 2 ஆண்டுகளில் அதிகரிக்கும் என்றும் ஆனந்த ரதி நிதி நிறுவனம் கூறியுள்ளது. இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலைகள் அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.