மும்பை : மத்திய அமைச்சகத்தில் அவ்வப்போது ஏதும் ஒரு கருத்தை கூறி, பின்னர் நம் நெட்டிசன்களிடம் வங்கிக் கட்டிக் கொள்வது வாடிக்கையான ஒரு விஷயமே.
அந்த வகையில் நமது சட்டம் மற்றும் நீதி, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மும்பையில் செய்தியாளர்களிடம் சந்தித்தவர், முன்னாள் பிரதமர் வாய்பாஜ் தலைமையிலான மத்திய அரசில் நான் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத் துறை அமைச்சராக இருந்தேன் என்று கூறியவர், கடந்த அக்டோபர் 2ம் தேதி 3 படங்கள் வெளியாகின.
தேசிய விடுமுறை தினமான அன்றும் வார், சைரா, ஜோக்கர் உள்ளிட்ட 3 திரைப்படங்கள் இந்தியில் வெளியாகின. இந்த திரைப்படங்கள் ஒரே நாளில் 120 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்றும் ஒரு பரபரப்பான தகவலை கூறியிருந்தார்.
பொருளாதாரா சரிவா? எங்கே?
இந்த மூன்று திரைப்படங்கள் ஒரே நாளில் 120 கோடி ரூபாய் வசூல் செய்கிறது என்றால், இந்தியாவில் பொருளாதார சரிவு எங்கிருக்கிறது என்றும் ரவி சங்கர் கூறியிருந்தார். இதனால் வழக்கம் போல நமது நெட்டிசன்களிடம் திட்டு வாங்கி கொண்டிருந்தார். இதுமட்டும் அல்ல நமது நெட்டிசன்களோடு சேர்த்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும் சேர்ந்த பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சர்ச்சனையான கருத்தை தான் வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இந்த கருத்து உண்மைதான்
மத்திய அமைச்சர் ரவிசங்கர் தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவதாக கூறியிருந்தாலும், தான் கூறிய அடிப்படையில் உண்மை என்றும், இது திரைப்படங்களின் தலை நகரமான மும்பையில் லட்சகணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது என்றும், இதன் மூலம் நாட்டிற்கு வரி பங்களிப்புகள் உள்ளது என்றும், இதனால் நமது திரைத்துறை மீது பெருமிதம் கொள்கிறேன் என்றும், அதே நேரத்தில் அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பல விதமான நடவடிக்கைகளை எடுத்து வருவதையும் சுட்டிக் காட்டியிருந்தேன் என்றும் கூறியுள்ளார்.
வேலையின்மை அதிகரிப்பு?
தேசிய கணக்கெடுப்பு அலுவலகத்தின் NSSO அறிக்கையின் படி, வேலையின்மை என்பது 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த 2017 - 2018ல் வேலையின்மை 6.1 சதவிகிதமாக உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது. இது தவறான அறிக்கை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் மத்திய அரசின் பல்வேறு விவகாரங்கள் குறித்த தரவுகளை இந்த என்எஸ்எஸ்ஓ என்னும் அரசு நிறுவனம் திரட்டி ஆய்வு செய்து வரும் நிலையில், ரவி சங்கர் பிரசாத் இப்படி கூறியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
கருத்து வாபஸ்
இந்த நிலையில் அவர் மீண்டும், நான் செய்தியாளர்களிடம் பேசிய முழு காணொளியும் சமூக வலைதளங்களில் இருக்கிறது. இருப்பினும் எனது அறிக்கை முற்றிலும் திரித்து கூறப்பட்டிருக்கிறது, அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு அமைச்சர் என்னும் முக்கியமான பொறுப்பில் இருப்பதால் எனது கருத்தை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்றும் ரவி சங்கர் கூறியுள்ளார்.