திருப்பூர்: வழக்கமாக தீபாவளி பண்டிக்கைக்கு முன்னதாக இருக்கும் நிலை இந்த வருடம் இல்லையே, என்ன தான் நடக்கிறது திருப்பூரில். இன்னும் மந்த நிலையில் இருந்து மீளவில்லையா? எப்போது தான் மீளும் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? என்று தான் திருப்பூர் தொழில் அதிபர்களை சந்தித்தோம்.
வழக்கமாக தீபாவளி சமயங்களில் இரவு பகல் பாராமல் உழைக்கும் மக்களுக்கு, நடப்பு ஆண்டில் இருக்கும் நாட்களிலேயே வேலை இல்லையாம்.
வாரத்தில் 3-4 நாட்கள் விடுமுறை அளித்து வருகிறார்களாம். போதாக் குறைக்கு சில நிறுவனங்களில் சம்பள குறைப்பும் உண்டாம். இதனால் வழக்கம் போல தீபாவளிக்கு முன்பு கிடைக்கும் போனாஸ் ஆவது சரிவர கிடைக்குமா? சரியான நேரத்தில் கிடைக்குமா? என்ற நிலை நிலவி வருகிறது.
சம்பளம் குறைவு
நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் சில நிறுவனங்கள் வேலைக்கு ஆள் இல்லாமல் தவித்து வந்தாலும், பல நிறுவனங்களுக்கு சரிவர ஆர்டர்கள் இல்லை என்பதே உண்மை. இதனால் பல ஆயிரம் பேர் வேலையின்றி தவித்து வருவதே உண்மை. இந்த நிலையில் வாரம் 2000- 5000 ரூபாய் வரை சம்பாதித்த தொழிலாளார்கள், இன்றைய காலகட்டத்தில் வாரத்தில் 1000 சம்பாதிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு பின்பு தான் சரியாகும்
இப்படி வேலையில்லாமல் தவிக்கும் நிலை ஒரு புறம் எனில், மறுபுறம் சிலர் நிறுவனங்களுக்கு போதுமான ஆர்டர் கிடைத்து விட்டது ஆனால் அது எல்லாம் தீபாவளி முடிந்து மறு வாரத்தில் தான் ஆரம்பிக்கும். அதுவரை இப்படி தொழில் மந்த நிலையாகவே இருக்கும் என்றும் பெருவாரியான பெரு நிறுவனங்கள் கூறுகின்றன. எனினும் சிறு குறு நிறுவனங்கள் ஜிஎஸ்டி பிரச்சனையால் மூடியது மூடியதுதான் என்றும் கூறப்படுகிறது. இவர்கள் ஊழியர்களுக்கு சம்பளம், போக்குவரத்து செலவு, கட்டிட வாடகை, ஆள் சம்பளம் என அனைத்தும் கொடுத்து, இதற்கு ஜிஎஸ்டியும் கட்டினால் எங்களுக்கென என்ன லாபம் கிடைக்கும் எனக் கூறி, சிறு குறு நிறுவனங்கள் வைத்திருப்பவர்களே வேலைக்கு செல்லும் அவல நிலையில் உள்ளதாக கூறுகிறார்கள்.
மாற்றம் இருக்கலாம்
எனினும் இது பற்றிய பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், முடிந்த மட்டும் தீபாவளிக்கு பின்பு இதில் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் திருப்பூரில் நிலவி வரும் மந்தநிலை தீபாவாளிக்கு பின்பு சரியாகலாம் என்றும் கருதப்படுகிறது. வழக்கமாக திருப்பூரில் 1 மாதத்திற்கு முன்பு இருந்தே தீபாவளி பண்டிகை இங்கு களைகட்ட ஆரம்பித்து விடும். ஆனால் இன்னும், இரண்டு வாராங்களே உள்ள நிலையில், இதுவரை பெரிதும் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. மாறாக இந்த பண்டிகை காலங்களில் கொடுக்கும் போனஸ்கள் கூட கொடுக்க முடியாத நிலை நிலவி வருகிறது என்றும் கூறப்படுகிறது.
1 லட்சம் கோடி இலக்கு
பொதுவாக பண்டிகை கால ஆடை தயாரிப்பு முடிந்து, குளிர்கால ஆடைக்கான ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும், இது தீபாவாளிக்கு பின்பு களைகட்டும் என்றும், மேலும் இன்னும் அடுத்த சில ஆண்டுகளில், திருப்பூரின் இலக்கு 1 லட்சம் கோடியாக நிர்ணயித்து உள்ளதாகவும், இந்த நிலையில் இன்னும் சில மாதங்களில் திருப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் ஜிஎஸ்டி பிரச்சனையால் நலிவடைந்துள்ள சிறு குறு நிறுவனங்களின் நிலை தான் என்ன என்று தான் தெரியவில்லை. மேலும் இது குறித்து பேட்டியளிக்க முடியுமா என்று சிறு குறு நிறுவனங்களிடம் கேட்டபோது, ஏற்கனவே முதலீடுகளை இழந்து பெருத்த நஷ்டத்தில் இருக்கும் நிலையில், இது போன்ற அறிக்கை வேண்டாம் என்றும் கூறுகின்றனர்.