டெல்லி: பொதுத்துறை வங்கிகளின் மெகா இணைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பாக வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் அடுத்த செவ்வாயன்று வங்கி நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம்.
அக்டோபர் 22 ம் தேதி தொழிற்சங்க அமைப்புகளால் முன்மொழியப்பட்ட வேலைநிறுத்தம் காரணமாக அதன் வங்கி நடவடிக்கைகள் மோசமாக பாதிக்கப்படக்கூடும் என்று பேங்க் ஆப் பரோடா ஏற்கனவே எச்சரித்துள்ளது. அதே பேங்க் ஆஃப் பரோடா வங்கி, தன்னுடைய அறிக்கை ஒன்றில், வங்கியின் வேலை நிறுத்த நாளில், வங்கி கிளைகள் சீராக செயல்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகச் சொல்லி இருக்கிறது.
அதே பேங்க் ஆஃப் பரோடா வங்கி தான் "வேலைநிறுத்தம் செயல்பட்டால், கிளைகளின் செயல்பாடு பாதிக்கப்படலாம் அல்லது முடங்கக்கூடும்" என்றும் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பொதுத்துறை நிறுவன வங்கிகள் தான் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறது.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AlBEA) மற்றும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (BEFI) ஆகியோரால் அழைக்கப்பட்ட இந்த வங்கி வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் (ஏஐடியுசி) ஆதரவும் கிடைத்துள்ளது.
"அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு ஆகியவை கூட்டாக அக்டோபர் 22 ம் தேதி அகில இந்திய வங்கி வேலை நிறுத்தத்திற்கான அழைப்பை வழங்கியுள்ளன. அண்மையில் நிதி அமைச்சர் 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்க இருக்கும் முடிவுக்கு எதிராக இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்து இருக்கிறார்கள்" என்று AITUC அறிக்கை தெரிவித்துள்ளது.
வங்கி இணைப்புகள் தொடர்பான அரசாங்கத்தின் முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது என்று AITUC குறிப்பிட்டது.
கடந்த மாதமும், அகில இந்திய வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பு (AIBOC), அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம் (AIBOA), இந்திய தேசிய வங்கி அலுவலர்கள் காங்கிரஸ் (INBOC) மற்றும் தேசிய வங்கி அதிகாரிகளின் அமைப்பு (NOBO), இதே காரணத்துக்கு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். பின்னர், மத்திய நிதி செயலாளர் ராஜீவ் குமார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஆராய்வதாக உறுதியளித்ததை அடுத்து, செப்டம்பர் 26-27 வரை 48 மணி நேர வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டதை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டி இருக்கிறது.