மும்பை: சரிந்து வரும் பொருளாதாரத்தினை எச்சரிக்கும் வல்லுனர்கள் ஒரு புறம், பல ஆய்வு நிறுவனங்களும் மறுபுறம் பயமுறுத்தியே வருகின்றன, இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய முதலீட்டு வங்கியான கோல்டுமேன் சாச்சஸ் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 6 சதவிகிதமாக குறைத்துள்ளது.
நுகர்வோர் சரிவு என்பது மிகப்பெரிய பொருளாதாரத்தை பாதிக்கும் ஒரு பெரிய காரணியாக அமைந்துள்ளது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதே கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பிராச்சி மிஸ்ராவின் கருத்துப்படி, கடந்த 2018 ஜனவரி முதலே நுகர்வு குறைந்து வருவாதாக அவரது ஆராய்ச்சிப்படி கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 2018 இறுதிக்கு முன்னதாக ஐ.எல் அன்ட் எஃப்.எஸ் இயல்பு நிலையாக இருந்தது என்றும், இது பின்னர் தான் பணப்புழக்க நெருக்கடியில் சிக்கியது என்றும் கூறப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கலாம்
ஓட்டுமொத்த மந்த நிலையில் மூன்றில் ஒரு பங்கு வீழ்ச்சிக்கு நுகர்வு வீழ்ச்சியே காரணமாக உள்ளது எனவும், இதன் பின்னர் தான் மந்த நிலை மற்றும் நிதி தடைகளும் இதற்கு அடுத்தப்படியான காரணங்களாக உள்ளன. மேலும் இந்த மந்த நிலையால் வளர்ச்சி புள்ளிகள் 2 சதவிகிதம் குறைந்துவிட்டன என்றும் பொருளாதார நிபுணர் மிஸ்ரா கூறியுள்ளார். எனினும் அடுத்து வரும் இரண்டாவது பாதியில், இந்திய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் மிஸ்ரா கூறியுள்ளார்.
வட்டி குறைப்பு கைகொடுக்கலாம்
ரிசர்வ் வங்கி ஐந்தாவது முறையாக குறைக்கப்பட்ட வடி விகிதத்தினையடுத்து, இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் குறைந்துதுள்ளன என்றும், மேலும் கார்ப்பரேட்களுக்கு அளிக்கப்பட்ட வரி சலுகை நடவடிக்கைகள் வளர்ச்சியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் நீண்ட காலமாக முதலீடுகள் மற்றும் ஏற்றுமதிகள் சரிந்து வருவதாகவும் கூறிய மிஸ்ரா, இதே நேரத்தில் நுகர்வு குறைந்து வரும் நிலையில் இது புதிய வலியை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
மந்த நிலை நீடித்து வருகிறது
மேலும் தற்போது நீடித்து வரும் மந்த நிலையானது, இன்று நேற்றல்ல கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது என்றும் மிஸ்ரா கூறியுள்ளார். மேலும் இது டிமானிட்டைசேஷன் காலத்திலிருந்தே மந்த நிலை உள்ளதாகவும், இது கடந்த 2008 காலத்தில் இருந்த மந்த நிலை போன்றதாகவும் உள்ளது என்றும் கூறியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் கடந்த ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5%மாக குறைந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இன்னும் வளர்ச்சி வீழ்ச்சியிலேயே காணப்படுகிறது.
அரசியல் லாபம்
இந்த வீழ்ச்சியானது உலகளாவிய வர்த்தகத்தின் வீழ்ச்சியிலிருந்து 40% வீழ்ச்சி வருவதாகவும், இதே 30% வீழ்ச்சி நுகர்வு மந்த நிலையில் இருந்தும், மீதமுள்ளவை கடுமையான நிதிக் கட்டுப்பாட்டுகளாலும் வருவதாகவும் தரகு ஆராய்ச்சி சுட்டிக் காட்டுகிறது. இதே ஸ்ரே இன்ஃப்ரா நிதித் தலைவர் ஹேமந்த் கனோரியா இது குறித்து கூறுகையில், அரசியல் லாபங்களுக்காக பொருளாதாரம் குழப்பமடையக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
கடன் வளர்ச்சி வீழ்ச்சி
வங்கிகளுக்கிடையே நிலவி வரும் மந்த நிலையால் கடன் வளர்ச்சியின் விகிதமானது 13 -14 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது என்றும், இது முன்னர் 24 சதவிகித வளர்ச்சியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் மெதுவான தேவையே என்றும் கூறப்படுகிறது. மேலும் வங்கிகளில் அதிகரித்துள்ள ஒழுங்குமுறை அழுத்தங்கள் மற்றும் இதிலுள்ள ஆபத்துக்களும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
முதலீடு செய்யவே விருப்பம்
இந்த என்.பி.எஃப்.சிக்கள் கடன் வழங்குவதை விட கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதையே விரும்புகின்றனர் என்றும், இவர்கள் கடன் கொடுப்பதை எண்ணி அச்சப்படுகிறார்கள் என்றும், முதலில் இந்த அச்சத்தை உடைக்க வேண்டும் மிஸ்ரா கூறியுள்ளார்.
எனினும் நீடித்து மந்த நிலையை மீட்டெடுக்க அரசு பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வந்தாலும், அதை இன்னும் முடுக்கி விட வேண்டும் என்பதே இங்கு பொருளாதார நிபுணர்களின் கோரிக்கையாக உள்ளது.