ஒரு புறம் இ- காமர்ஸ் நிறுவனங்களின் சலுகைகளால் சில நன்மைகள் என்றாலும், பல சில்லறை வர்த்தகர்களின் வர்த்தகம், இதனால் படுத்தே விட்டது என்பது அப்பட்டமான உண்மை.
இதனால் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகும் நிலையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களில் வணிகம் செய்யும், முதல் ஐந்து நிறுவனங்களின் வணிக மாதிரி குறித்த விவரங்களை மத்திய அரசு கேட்டுள்ளது.
ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஆன்லைன் விற்பனை ஜாம்பவான்கள் ஆன அமேசான் பிளிப்கார்டு உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களுக்கு அரசு சில விதிமுறைகளை பிறப்பித்துள்ளன.
அரசின் விதிமுறைகளை மீறியதா?
இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள், இந்த பண்டிகை கால விற்பனையில் மத்திய அரசின் முதலீட்டு கொள்கையை மீறியதாக கான்ஃபெடரேஷன் ஆஃப் ஆல் இந்தியா டிரேடர்ஸ்க்கு (CAIT) புகார்கள் வந்ததையடுத்து இந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனங்களுக்கு DPIIT அமைப்பு தனித்தனி கேள்விகளை கேட்டுள்ளது என்றும், குறிப்பாக அவர்களின் மூலதன அமைப்பு, வணிக மாதிரி மற்றும் சரக்கு மேலாண்மை அமைப்பு ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும்படியும் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நெறிமுறையற்ற நடைமுறை
குறிப்பாக இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கையை மீறுவதாகவும் வர்த்தகர்கள் அமைப்பு மூலம் சிஏஐடி பல புகார்கள் வந்ததாகவும் கூறப்படும் நிலையிலேயே, இந்த கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சிஏஐடி இந்த நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் விலையில் ஈடுபடுவதன் மூலம், நெறிமுறையற்ற நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன என்று மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டுகின்றது.
தொடர்ந்து விசாரணை
இந்த நிலையிலேயே Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) அமைப்புக்கும், சி.ஏ.ஐடி உறுப்பினர்களுக்கும் இடையே தனித்தனியே பல கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிராக கொள்ளையடிக்கும் விலை நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
சில்லறை விற்பனையாளர்களின் தகவல்கள்
இந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட கேள்வித்தாள்களில், இவர்களின் தளங்களில் பட்டியிலிடப்பட்ட மொத்த விற்பனையாளர்களின் எண்ணிக்கை பற்றிய கேள்விகளும் அடங்கும் என்றும், கட்டுபடுத்தப்பட்ட மற்றும் கட்டுபாடற்ற விற்பனையாளர்களின் பட்டியல் மற்றும் விற்பனையாளர்களுக்கான விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் பட்டியல், மற்றும் முதல் ஐந்து விற்பனையாளர்களின் மொத்த விற்பனை விகிதம் உள்ளிட்ட பல தகவல்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாங்கள் விதிமுறைகளை பின்பற்றுகிறோம்
இது குறித்து இ-காமர்ஸ் நிறுவனங்கள் கூறுகையில், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இருவரும் நாங்கள் அன்னிய நேரடி முதலீட்டு கொள்கையை பின்பற்றுகின்றோம் என்றும், மேலும் தங்களின் தளங்களின் விற்கப்பட வேண்டிய பொருட்களின் விலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்க நாங்கள் அனுமதிக்கவிடுவதில்லை என்றும், ஆழ்ந்த தள்ளுபடியில் ஈடுபடுவதை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம் என்றும், இந்த ஆழ்ந்த தள்ளுபடிகளை பிராண்டுகள் தான் வழங்குகின்றன என்றும் கூறியுள்ளன.
பலே விற்பனை
இந்த நிலையில் ஆலோசனை நிறுவனமான ரெட்சீர் நிறுவனத்தின் கூற்றுப்படி, அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் பண்டிகை கால தள்ளுபடி விற்பனையில் 39,000 கோடி ரூபாய் ஈட்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு புறம் அதிகப்படியான தள்ளுபடியால் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறி வரும் இன்றைய தலைமுறையினர், ஒரு முறையேனும் நமது உள்ளூர் வர்த்தகர்களையும் நினைத்து பார்க்க வேண்டும். அதிலும் தற்போது டெங்குவை விட மிக வேகமாக பரவி வரும் ஆன்லைன் மோகம், கிராமங்கப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விதமாகவே உள்ளது என்றும் நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.