கடந்த இரண்டு நாட்களாக, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முறைகேடு புகார் தான் ஒரே சர்ச்சைப் பேச்சு. தற்போது இந்த சர்ச்சை பேச்சு குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலக்கனி ஒரு ஸ்டேட்மெண்ட் வெளியிட்டு இருக்கிறார். இனி அவர் மொழியில்...
இன்ஃபோசிஸ் நிறுவனம், கடந்த அக்டோபர் 21, 2019 அன்று வெளியிட்ட, அந்த பெயர் குறிப்பிடாத நபர்கள் கொடுத்த புகார் குறித்து, விரைவில் மேற்படி விவரங்களைத் தெரியப்படுத்துகிறோம் எனச் சொல்லி இருக்கிறார் நந்தன் நிலக்கனி.
இன்ஃபோசிஸ் இயக்குநர் குழு உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு புகார்கள் வந்தது. அதில் ஒரு புகார் செப்டம்பர் 20, 2019 அன்று "Disturbing unethical practices" என்கிற பெயரில் வந்திருக்கிறது. மற்றொரு புகார் கடந்த செப்டம்பர் 30, 2019 அன்று "Whistleblower Complaint" என்கிற பெயரில் வந்திருக்கிறது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகளை, துணிந்து வெளியிடுபவர்களை பாதுகாக்கும் Whistle blower வழக்கப் படி, இந்த புகார், கடந்த அக்டோபர் 10, 2019 அன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆடிட் கமிட்டியிடமும், அக்டோபர் 11, 2019 அன்று நான் எக்ஸிக்யூட்டிவ் உறுப்பினர்கள் முன்பும் சமர்பித்து இருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார் நிலக்கனி.
அதோடு, அந்த தேதி குறிப்பிடாத புகாரில், முதன்மைச் செயல் அதிகாரி சலீல் பரேக் மேற்கொண்ட சர்வதேச பயணங்களில் செய்த முறைகேடுகள் குறித்துச் சொல்லப்பட்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் நிலக்கனி. மேலும் அக்டோபர் 03, 2019 தேதி இட்ட புகார் ஒன்று, அமெரிக்காவில் இருக்கும் Whistleblower protection program அலுவலகத்துக்கு கடிதம் சென்று இருப்பதும் இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு, கடந்த அக்டோபர் 16, 2019 அன்று தெரிய வந்ததாகச் சொல்லி இருக்கிறார்.
ஆனால் தங்களுக்கு வந்த புகார் கடிதங்களுடன் எந்த ஒரு மெயில் அல்லது வாய்ஸ் ரெக்கார்டிங் புகார்களும் கிடைக்கவில்லை. இந்த புகாரை முழுமையாக விசாரிப்போம். இந்த விசாரணை முழுமையாகவும், சுதந்திரமாகவும் நடக்க, இந்த புகார் குறித்த விசாரணையில் இருந்து சலீல் மற்றும் நிலஞ்சன் தலையிட மாட்டார்கள் எனவும் சொல்லி இருக்கிறார் நிலக்கனி.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆடிட் கமிட்டியிடம் சமர்பிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து அக்டோபர் 11, 2019 அன்றே Ernst & Young நிறுவன ஆடிட்டர்களிடம் ஆலோசனை கேட்கத் தொடங்கி இருக்கிறோம். அதோடு கடந்த அக்டோபர் 21, 2019 அன்று, ஒரு தனி விசாரணையை நடத்த Shardul Amarchand Mangaldas & Co. நிறுவனத்தையும் பணியில் அமர்த்தி இருக்கிறோம். இந்த விசாரணைகளுக்குப் பின் வரும் விவரங்களை வைத்து எங்கள் ஆடிட் கமிட்டி தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் எனச் சொல்லி இருக்கிறார் நிலக்கனி.
இந்த புகார் குறித்து, கடந்த அக்டோபர் 11, 2019 அன்றே, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஸ்டாச்சுட்டரி ஆடிட்டராக இருக்கும் Deloitte இந்தியா நிறுவனத்துக்கும் முழுமையாக தெரியப்படுத்திவிட்டோம். தற்போது விசாரணை முழுவீச்சில் போய்க் கொண்டிருப்பதால் மேற்கொண்டு எந்த கருத்தும் சொல்ல முடியாது. கூடிய விரைவில் விசாரணை குறித்த விவரங்களை வெளியிடுகிறோம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு, எப்போதும் உயர்ந்த கார்ப்பரேட் நிர்வாக மேலாண்மையைக் கடைபிடிக்கும். அனைத்து பங்குதாரர்களையும் பாதுகாக்கும் எனச் சொல்லி இருக்கிறார் நந்தன் நிலக்கனி.