தற்போது இந்தியா பல்வேறு டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனங்களின் சேவைகளைப் பயன்படுத்தும் பல தரப்பு வாடிக்கையாளர்களைக் கொண்ட நாடாக மாறிக் கொண்டு இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு வரை ஆன்லைனில் பணப் பரிமாற்றம் என்றால், யாருக்காவது பணம் அனுப்புவது, மின்சார கட்டணங்களைச் செலுத்துவது, மொபைல் போன்களுக்கு ரீசார்ஜ் செய்வது போன்ற வேலைகளைத் தான் செய்து கொண்டிருந்தோம்.
ஆனால் இன்று 5 ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்க வேண்டும் என்றால் கூட நம் ஸ்மார்ட் ஃபோனில் இருக்கும் பேடிஎம், கூகுள் பே என பல ஆன்லைன் பேமெண்ட் செயலிகள் வழியாக பணம் செலுத்தி வாங்கிக் கொண்டு இருக்கிறோம். இந்த டிரெண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் இப்போது இதை இரண்டு நிறுவனங்கள் சேர்ந்த எடுத்த ஒரு சர்வேயும் உறுதி செய்கிறது.
இந்தியர்கள், ஆன்லைன் பேமெண்ட் செயலிகள் வழியாக பேமெண்ட் செய்வது அல்லது பணப் பரிமாற்றங்களைச் செய்வது தொடர்பாக இரண்டு நிறுவனங்கள் சேர்ந்து சர்வே எடுத்து தன் சர்வே முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள். குறிப்பாக பண்டிகை கால வியாபாரங்களில் இந்தியர்கள் பனம் செலுத்த டிஜிட்டல் வழிமுறைகளைத் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள் எனச் சொல்லி இருக்கிறது ஏசிஐ வேர்ல்ட் வைட் மற்றும் யூகவ் (ACI Worldwide and YouGov) ஆகிய நிறுவனங்கள்.
இந்த ACI Worldwide and YouGov நிறுவனங்கள் எடுத்த சர்வேயில் 42 சதவிகித இந்திய வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கும் பொருள் அல்லது பெறும் சேவைகளுக்கு ஆன்லைன் முறையிலேயே பணத்தைச் செலுத்த விரும்புகிறார்களாம். இந்த டிஜிட்டல் பேமெண்ட் என்றால் யூபிஐ மற்றும் இ வேலட்டுகளைத் தான், நம் இளைஞர்கள் அதிகம் சொல்கிறார்களாம். நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற வங்கிகளின் சேவைகள் எல்லாம் இதற்கு அடுத்து தான் பயன்படுத்துகிறார்களாம்.
அப்படி என்றால் கார்ட் பேமெண்டை விட இந்த டிஜிட்டல் பேமெண்ட் வழியாகத் தான் அதிக பேர் பணம் செலுத்துகிறார்களா..? என்றால் ஆம். டிஜிட்டல் பேமெண்ட் வழிமுறைகளுக்குப் பின் தான் கார்ட் பேமெண்ட்கள். இந்தியாவின் மொத்த வாடிக்கையாளர்களில் 29 சதவிகிதம் பேர் தங்கள் டெபிட் (ஏ டி எம்) அல்லது க்ரெடிட் கார்ட்கள் வழியாக தங்கள் பேமெண்ட்களைச் செலுத்த விரும்புகிறார்களாம்.
அப்படி என்றால் காசுக்கே இடம் இல்லையா..? என ஆச்சர்யப்பட வேண்டாம். ரொக்கமாக மட்டுமே வாங்கிய பொருளுக்கான கட்டணத்தைச் செலுத்துவேன் என ஒற்றைக் காலில் நிற்கும் இந்திய வாடிக்கையாளர்களும் இருக்கிறார்களாம். ஒட்டு மொத்த இந்திய வாடிக்கையாளர்களில் 27 சதவிகிதம் பேர் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் மற்றும் கார்ட் பேமெண்ட்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பணத்தை வைத்துத் தான் பொருட்களை வாங்க விரும்புகிறார்களாம்.
வாழ்க டிஜிட்டல் இந்தியா..! இந்த சர்வே எத்தனை பேரிடம் எடுக்கப்பட்டது, எந்த வயது வரம்பினர்களிடம் எடுக்கப்பட்டது, எந்த மாநிலத்தில் எடுக்கப்பட்டது, பாக்கி உள்ள (42+29+27 = 98 போக) 2 சதவிகித இந்திய வாடிக்கையாளர்கள் எப்படி தங்கள் பணத்தைச் செலுத்துகிறார்கள் போன்ற விவரங்களைச் சொல்லவில்லை.