பெங்களூரு: வீ வொர்க், கடந்த 2010-ம் ஆண்டு நிறுவப்பட்ட, வணிக ரீதியிலான அலுவலக இடங்களை, ஐடி மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்கள் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு அமெரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனம். இந்த நிறுவனம் சுமாராக 40 லட்சம் சதுர மீட்டர் அலுவலக இடத்தை நிர்வகித்து வருகிறார்களாம். சமீபத்தில் கூட, வீ வொர்க் நிறுவனத்தின் ஐபிஓ வெளி வர இருந்து மதிப்பீடுகள் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருந்ததால் ஐபிஓ ரத்து செய்யப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு தான் இந்த வீ வொர்க் நிறுவனத்தின் 80 சதவிகித பங்குகளை வாங்கி, வீ வொர்க் நிறுவனத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டது ஜப்பானின் சாப்ட் பேங்க் குழுமம். சாஃப்ட் பேங்க் குழுமத்தின் உயர்மட்ட பங்குதாரர்கள் வகுத்துள்ள திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனத்தை மேம்படுத்த, சுமார் 4,000 பேரை வேலையை வீட்டு நீக்கி, வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்களாம். இந்த செய்தியை ஃபனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.

வீ வொர்க் நிறுவனத்துக்காக உலகம் முழுக்க வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை கொத்தாக வீட்டுக்கு அனுப்பப் போகிறார்களாம். அதிலும் குறிப்பாக ஜானிடோரியல் ஸ்டாஃப் (Janitorial Staff) என்று சொல்லப்படும் பாதுகாப்பு ஊழியர்களில் மட்டும் சுமார் 1,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப வாய்ப்பு இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த விஷயத்தை பற்றி தெரிந்தவர்கள் கூட இந்த செய்தியை உறுதி செய்து இருக்கிறார்களாம்.
கடந்த அக்டோபர் 22, 2019 செவ்வாய்க் கிழமை அன்று, வீ வொர்க் நிறுவனத்தின் 80 சதவிகித பங்குகளை வாங்க, ஜப்பானின் சாஃப்ட் பேங்க் நிறுவனம் 10 பில்லியன் அமெரிக்க டாலர் (7.76 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்) செலவழிக்க சாப்ட் பேங்க் ஒப்புக் கொண்டது. வீ வொர்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆடம் நியூமானுக்கு (Adam Neumann), வீ வொர்க் நிறுவனத்தில் இருக்கும் உரிமைகள் மற்றும் அதிகாரங்களை விட்டுக் கொடுக்க 1.7 பில்லியன் டாலர் கொடுத்து இருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது. இது வரை இந்த கருத்துக்கு வீ வொர்க் நிறுவனம் எந்த ஒரு பதிலோ அல்லது மறுப்போ கொடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications