பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் ஆகியவற்றின் தகவல் தொழில்நுட்ப தளங்களை இணைப்பதற்கு, மூன்று வங்கிகளும் சட்ட ரீதியாக இணைந்த பின், குறைந்தது ஆறு மாதங்கள் ஆகலாம் என்று ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மூன்று வங்கிகளையும் இணைக்கும் வேலை வரும் 2020 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிகளை ஒருங்கிணைக்கும் போது, அவைகளை தொழில்நுட்ப ரீதியாகவும் ஒருங்கிணைக்க வேண்டியது மிகவும் அவசியம். பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) தற்போது மென்பொருள் ஃபினாகில் வெர்சன்10-ஐப் பயன்படுத்துகிறது, மற்ற இரண்டு வங்கிகளும் ஃபினாகில் வெர்சன் 7-ஐப் பயன்படுத்துகின்றன.
கடந்த ஆகஸ்ட் 2019-ல் தான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 பெரிய பொதுத் துறை வங்கிகளை நான்கு பெரிய வங்கிகளாக ஒருங்கிணைக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார். அப்போது தான் பஞ்சாப் நேஷனல் பேங்க், ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் (ஓ.பி.சி) மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா (யுபிஐ) ஆகிய வங்கிகளை ஒன்றிணைத்து நாட்டின் இரண்டாவது பெரிய அரசு வங்கியாக அமைக்கும் திட்டத்தையும் முன் வைத்தார். இந்த வங்கிகளை எல்லாம் ஒன்றாக இணைப்பதால் 17.95 லட்சம் கோடி ரூபாய் (கடன்கள் மற்றும் வைப்புத்தொகை) வணிகத்துடன் இருக்கும் என்பதையும் இங்கு பார்க்க வேண்டி இருக்கிறது.
அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் இணைப்பால், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் அவர்கள் மூன்று வங்கிகளின் சிறந்த நடைமுறைகளில் இருந்து பயனடைய முடியும் என ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முகேஷ் குமார் ஜெயின் கூறினார்.
ஏப்ரல் 1 முதல் மூன்று வங்கிகளின் அனைத்து கிளைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு ரொக்க வைப்பு, பணத்தை திரும்பப் பெறுதல், பாஸ் புக் புதுப்பித்தல், இருப்பு விசாரணை உள்ளிட்ட 14 - 15 அடிப்படைச் சேவைகள் வழங்கப்படும் என்று ஜெயின் கூறினார். அதோடு இந்த மூன்று வங்கி இணைப்பிற்குப் பின் "ஒருவர் பி.என்.பியின் கிளைக்குள் நுழைந்து மற்ற வங்கிகளின் சேவைகளைப் பெற முடியும்" என்று ஜெயின் கூறினார்.