மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின், டிஜிட்டல் முன் முயற்சிகளுக்கு என்றே பிரத்யேகமாக, ஒரு துணை நிறுவனத்தை உருவாக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த துணை நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருக்குமாம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், புதிதாக உருவாக்க இருக்கும் துணை நிறுவனத்தில், விருப்பப்படி மாற்றத்தக்க பங்குகள் (Optionally Convertible Preference shares) மூலம் துணை நிறுவனத்தில் 1,08,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறார்களாம். இந்த செய்தியை ரிலையன்ஸ் நிறுவனமும் தன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தான், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோ காம் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கிறார்கள். இப்போது புதிதாக உருவாக்க இருக்கும் இந்த துணை நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வைத்திருக்கும் அனைத்து ஜியோ நிறுவன பங்குகளையும் வாங்க இருக்கிறதாம். இந்த ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோ காம் நிறுவனத்தின் பங்கு முதலீடுகள் சுமார் 65,000 கோடி ரூபாய் வரை இருக்குமாம்.
மேற்கூறியவற்றின் விளைவாக, ஸ்பெக்ட்ரம் தொடர்பான கடன்களைத் தவிர, மார்ச் 31, 2020 க்குள் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், கிட்டத்தட்ட நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாறும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் சொல்லி இருக்கிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறுகையில், " இந்த புதிய துணை நிறுவனம், உண்மையிலேயே மாற்றங்களைக் கொண்டு வரும் மற்றும் புதிய டிஜிட்டல் சேவைகளைக் கொடுக்கும் தளமாக இருக்கும். எங்கள் டிஜிட்டல் சூழல் அமைப்பின் வளர்ச்சியையும் , அதன் அளவையும் கருத்தில் கொண்டு, பலரும் எங்களோடு இணைந்து வேலை பார்க்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். ரிலையன்ஸின் இந்த புதிய நிறுவனம், சரியான கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு, நல்ல படியாக முன்னேறி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு சரியான மதிப்பை உருவாக்குவோம், நல்ல மதிப்புகளை வெளிக் கொணர்வோம்" எனச் சொல்லி இருக்கிறார்.
தற்போது முன் மொழியப்பட்ட இந்த ஒருங்கிணைந்த கட்டமைப்பு எல்லாம் சட்டப்படி சரியாக நடக்கும் எனவும் சொல்லி இருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.