நர்மதை ஆறு மற்றும் விந்திய மலைத் தொடருக்கு தெற்கே உள்ள பகுதிகளை தென் இந்தியா என்று அழைக்கிறார்கள். வரலாற்றில் அழைத்தும் இருக்கிறார்கள். ஒரு கணக்கிற்காக நாம் இந்த வரையறையை இன்று எடுத்துக் கொள்வோம்.
இந்த வரையறைப் படிப் பார்த்தால், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், ஒடிஸா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என 8 மாநிலங்களை தென் இந்தியா என எடுத்துக் கொள்வோம்.
இப்படி அழைக்கப்படும் தென் இந்திய மாநிலங்கள் தான் இன்று இந்திய அரசுக்கான நேரடி வரி வருவாயில் சுமாராக 50 சதவிகிதத்துக்கு மேல் கொடுக்கிறது என்றால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும்.
ஏன் நேரடி வரி வருவாய்
மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாய் மற்றும் மறைமுக வரி வருவாய் என இரண்டு பெரிய வரி வருவாய்கள் இருக்கின்றன. இதில் கடந்த 2008 - 09 நிதி ஆண்டில் இருந்து, மத்திய அரசின் மொத்த வரி வருவாயில், நேரடி வரி வருவாய் தான் 50 சதவிகிதத்துக்கு மேல் அரசுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதில் 2016 - 17 நிதி ஆண்டில் மட்டும் மொத்த வரி வருவாயில், நேரடி வரி வருவாய் 49.65 சதவிகிதமாக கொஞ்சம் இறக்கம் கண்டதும் குறிப்பிடத்தக்கது. ஆகையால் தான் நேரடி வரி வருவாய் வரும் மாநிலங்களும் இங்கு பெரிதாக கவனிக்கப்பட வேண்டி இருக்கிறது.
நேரடி வரி வருவாய்
கார்ப்பரேட் வரி வருவாய் மற்றும் தனி நபர் வருமான வரி போன்றவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் நேரடி வரி வருவாயை கணக்கிடுகிறார்கள். கடந்த 2013 - 14 நிதி ஆண்டு தொடங்கி 2018 - 19 நிதி ஆண்டு வரைக்குமான இந்த நேரடி வரி வருவாயை கணக்கில் எடுத்துக் கொண்டால், நம் இந்தியாவில் வரி வருவாயில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் தெளிவாக பார்க்க முடிகிறது.
6 ஆண்டு கணக்கு
கடந்த 2013 - 14 முதல் 2018 - 19 வரைக்குமான 6 நிதி ஆண்டுக்கான நேரடி வரி வருவாய் கணக்கை வைத்து எந்த மாநிலங்கள் அதிக நேரடி வரி வருவாயை மத்திய அரசுக்கு கொடுத்து வருகிறது எனப் பார்த்தால், மேலே சொன்ன 8 தென் இந்திய மாநிலங்களில், தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற 3 மாநிலங்கள் மட்டும் சுமார் 54 சதவிகித நேரடி வரி வருவாயைச் செலுத்துகிறார்கள்
மகாராஷ்டிரம் மட்டும்
மகாராஷ்டிரா மட்டும் கடந்த 2013 - 14 முதல் 2018 - 19 வரையான நிதி ஆண்டில் 19.17 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாயாக கொடுத்து இருக்கிறார்கள். மத்திய அரசுக்கு கடந்த 6 நிதி ஆண்டுகளாக கிடைத்த மொத்த நேரடி வரித் தொகையில் மகாராஷ்டிராவின் பங்கை மட்டும் கணக்கிட்டால் இது 37.85 சதவிகிதம். பின்ன அம்பானி, ஷாரூகான், ஆமிர் கான், சல்மான் கான் போன்ற பெரிய ஆட்கள் எல்லாம் இருக்கும் போது இவ்வளவு வருமானம் கூட வரவில்லை என்றால் பிறகு எப்படி..?
மற்ற மாநிலங்கள்
மகாராஷ்டிரத்தைத் தொடர்ந்து நம் அண்டை மாநிலமான கர்நாடகம், கடந்த 6 நிதி ஆண்டில் 4.99 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசுக்குச் செலுத்தி இருக்கிறார்கள். அரசின் மொத்த வரி வருவாயில் இது 9.8 சதவிகிதம். அதே போல தமிழகம் கடந்த 6 நிதி ஆண்டுகளுக்கு மொத்தமாக 3.39 லட்சம் கோடி ரூபாயைச் செலுத்தி இருக்கிறார்கள். இது மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாய் மூலம் கிடைத்த மொத்த வருவாயில் 6.7 சதவிகிதம். ஆக மொத்தம் (37.8 + 9.8 + 6.7) 54.3 சதவிகித நேரடி வரி வருவாய் தென் இந்தியாவின் 3 மாநிலங்களில் இருந்து மட்டுமே மத்திய அரசுக்கு கிடைத்துக் கொண்டு இருக்கிறது.
மொத்த தென் இந்தியா
தமிழகம் - 3.39 லட்சம் கோடி ரூபாய்
கேரளா - 0.80 லட்சம் கோடி ரூபாய்
கர்நாடகம் - 4.99 லட்சம் கோடி ரூபாய்
தெலுங்கானா - 0.23 லட்சம் கோடி ரூபாய்
ஆந்திரா - 2.20 லட்சம் கோடி ரூபாய்
சத்திஸ்கர் - 0.21 லட்சம் கோடி ரூபாய்
ஒடிஸா - 0.59 லட்சம் கோடி ரூபாய்
மகாராஷ்டிரா - 19.17 லட்சம் கோடி ரூபாய் என தென் இந்தியாவின் 8 மாநிலங்களில் இருந்து மட்டும் 31.58 லட்சம் கோடி ரூபாய் நேரடி வரி வருவாய் மத்திய அரசுக்கு போய்க் கொண்டிருக்கிறது.
சதவிகிதம்
மேலே சொன்ன 31.58 லட்சம் கோடி ரூபாயை சதவிகிதத்தில் கணக்கிட்டு பார்ப்போமா..! கடந்த 2013 - 14 முதல் 2018 - 19 நிதி ஆண்டில் அரசுக்கு கிடைத்த ஒட்டு மொத்த நேரடி வரி வருவாய் சுமாராக 50.67 லட்சம் கோடி ரூபாய். ஆக 31.58 / 50.67 * 100 = 62 சதவிகித நேரடி வரி வருவாய், தென் இந்தியாவில் இருந்து மட்டுமே மத்திய அரசுக்கு போய்க் கொண்டு இருக்கிறது.
வட இந்தியா
அதிக மக்கள் தொகை கொண்ட உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் கூட குறைவாகவே நேரடி வரி வருவாயைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தென் இந்தியாவின் 8 மாநிலங்கள் சேர்ந்து 62 சதவிகித நேரடி வரி வருவாய், மீதமுள்ள எல்லா மாநிலங்களையும் சேர்த்து 38 சதவிகிதம் எனும் போதே தென் இந்தியா மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருமானம், நம் சகோதர மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவது தெளிவாக தெரிகிறதே..!