பெங்களூரு: வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள், கூடிய விரைவில் யுனிஃபைட் பேமென்ட்ஸ் இன்டர்ஃபேஸை என்று அழைக்கப்படும் யுபிஐ சேவையைப் பயன்படுத்தி, அங்கு வாங்கும் பொருட்கள் மற்றும் பெறும் சேவைகளுக்கு பணம் செலுத்தலாம் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இதைப் பற்றிய விவரம் அறிந்த இரண்டு வங்கி அதிகாரிகளும் இந்த செய்தியை உறுதி செய்து இருக்கிறார்கள்.
யுபிஐ, என் பி சி ஐ (NPCI - National Payments Corporation of India) என்கிற அமைப்பால் நடத்தப்படும் வங்கிகளுக்கு இடையேயான நிதி பரிமாற்ற வழிமுறை.
பணப் பரிமாற்றம்
இந்த யூபிஐ மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் அடுத்த சில நொடிகளிலேயே பணப் பரிமாற்றம் செய்து முடிக்கப்படுகிறது. யூபிஐ சேவையைப் பயன்படுத்தும் கூகுள் பே, பேடிஎம், போன்பே எல்லாம் ஒரு சில பேமெண்ட் செயலி எடுத்துக்காட்டுகள். இன்று இந்த யூபிஐ சேவை இந்தியாவில் மட்டுமே அதிகப்படியாக வளர்ந்து கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் இன்று வரை இந்த சேவையைப் பயன்படுத்தி பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியவில்லை.
வெளிநாடுகள்
கூடிய விரைவில், சுமார் 6 மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில், இந்த யூபிஐ சேவை தொடங்க வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக என் பி சி ஐ வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி இருப்பதாகச் சொல்கிறது எகனாமிக் டைம்ஸ். "மேலே சொன்ன, இந்த இரண்டு நாடுகளும், என் பி சி ஐ நிறுவனத்தின் ரூபே அட்டைகளின் சேவைகளை பயனப்டுத்தத் தொடங்கி இருக்கின்றன. இப்போது ரூபே சேவையைத் தொடர்ந்து யூபிஐ சேவைகளையும் இந்த நாடுகளில் களம் இறக்கப் பார்க்கிறார்கள் என் பி சி ஐ தரப்பினர்கள்.
நல்லது தானே
"ஒருவேளை, என் பி சி ஐ திட்டம் போடுவது போல, மேலே சொன்ன இரண்டு நாடுகளில் யூபிஐ சேவைக்கு அனுமதி கிடைத்துவிட்டால், அங்கு பயணம் செய்யும் இந்தியர்களுக்கு இது ஒரு பெரிய வரப் பிரசாதமாக இருக்கும். அந்த நாடுகளில் வாங்கும் பொருட்கள் மற்றும் பெறும் சேவைகளுக்கு, நம் இந்தியர்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு போலவே, யுபிஐ வழியாகவும் பணத்தைச் செலுத்த முடியும் "என்று ஒரு மூத்த வங்கியாளரே சொல்லி இருக்கிறார்.
இவ்வளவா..?
NPCI பகிர்ந்த சமீபத்திய தரவுகளின்படி, யுபிஐ சேவையைப் பயன்படுத்தி செப்டம்பர் மாதத்தில் 955 மில்லியன் பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது. ஆக தற்போது கார்ட் பேமெண்ட் சேவைகளை வழங்கி வரும் விசா, மாஸ்டர் கார்ட் போன்றவர்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக வளர்ந்து கொண்டிருக்கிறது யூபிஐ. ரிசர்வ் வங்கி, இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர் நந்தன் நிலக்கனி தலைமியில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் கமிட்டி ஒன்று அமைத்தது.
வெளிநாடுகள் கடை விரி
நந்தன் நிலக்கனி தலைமையிலான அந்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக் குழு, என் பி சி ஐ, அதன் பேமெண்ட் சொல்யூஷன்களான யுபிஐ, ரூபே மற்றும் பிஹெச்ஐஎம் போன்றவைகளை சர்வதேச அளவில் கொண்டு செல்ல வேண்டும் எனப் பரிந்துரைத்ததும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது. ஏற்கனவே ஃபேஸ்புக், கூகுள், சியாமி என பல நிறுவனங்களும் இந்த யூபிஐ பேமெண்டில் களம் இறங்கி இருப்பதும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.
வியாபாரிகள் மற்றும் வங்கிகள்
இப்போது யூபிஐ சேவையின் வளர்ச்சிக்கு முன்பு இருக்கும் மிகப் பெரிய சவாலே, மற்ற நாட்டு வணிகர்கள் எப்படி யூபிஐ சேவையை ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் மற்றும் அந்த நாட்டு வங்கிகள் எப்படி இந்த யூபிஐ சேவையை நம்பி களம் இறங்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து தான் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுகிறார்கள் அந்த வங்கி அதிகாரிகள். பொறுமையாகப் பார்ப்போம், நம் யூபிஐ சர்வதேச அரங்கி கொடி நட்டு விஸ்தரிக்கிறதா, இல்லையா என அடுத்த சில வருடங்களில் தெரிந்து விடும்.