உலக நாடுகளில் மத்திய வங்கிகள் பணவீக்கத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகளவில் உயர்த்தியது.
இதனால் சந்தையில் பணப்புழக்கம் குறைந்தது மட்டும் அல்லாமல் முதலீட்டு நிறுவனங்கள் அனைத்தும் புதிய முதலீடுகள் செய்வதைப் பெரிய அளவில் குறைத்தது. இதனால் போதிய முதலீடுகள் இல்லாமல் இருக்கும் அனைத்து நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்து வர்த்தகத்தை நிலைநிறுத்த வேண்டி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியது.
இதன் எதிரொலியாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 18000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தது.
மத்திய வங்கிகள்
அமெரிக்கா முதல் ஐரோப்பா சீனா வரையில் மத்திய வங்கிகள் குறைவான வட்டி விகிதத்தைக் கொண்டு இருக்கும் நிலையில் பொதுவாக முதலீட்டு நிறுவனங்களும், முதலீட்டாளர்கள் என அனைத்து தரப்பினரும் வங்கிகளில் கடன் வாங்கி முதலீடு செய்வது வழக்கம்.
முதலீடுகள்
ஆனால் தற்போது மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தியதால் வட்டியை விட அதிகமான தொகையை லாபமாகப் பெற வேண்டிய கட்டாயத்தில் முதலீட்டு நிறுவனங்கள் மூழ்கியது. இதனால் முதலீட்டை குறைத்ததையும், புதிய முதலீடுகளை நிறுத்தியும், லாபம் அளிக்காத முதலீடுகளைத் திரும்பப் பெற துவங்கியது.
52 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இந்த funding winter-ல் சிக்கிக்கொண்ட அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதை முதல் முக்கிய நடவடிக்கையாக எடுத்தது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 52 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் funding winter-ல் மாட்டிக்கொண்டு சுமார் 17,989 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.
18000 ஊழியர்கள் பணிநீக்கம்
எட்டெக், கன்ஸ்யூமர் சர்வீசஸ், ஈகாமர்ஸ், ஹெல்த் டெக், லாஜிஸ்டிக்ஸ், பின்டெக், என்டர்பிரைஸ் டெக், மீடியோ மற்றும் எண்டர்டெயின்மென்ட், அக்ரிடெக், கிளீன்டெக் எனப் பல துறையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இணைந்து சுமார் 18000 ஊழியர்களை 2022 ஆம் ஆண்டில் மட்டும் பணிநீக்கம் செய்துள்ளது.
44 சதவீத பணிநீக்கம்
இந்த மொத்த 18000 ஊழியர்கள் பணிநீக்கத்தில் 44 சதவீத பணிநீக்கம் மட்டும் எட்டெக் (Edtech) துறையில் இருந்து வந்தது. சுமார் Byju's, Unacademy, Vedantu, பைஜூஸ் கைப்பற்றிய WhiteHat Jr, Toppr, Practically, FrontRow, Lido, Invact Metaversity, Yellow Class, Teachmint, Lead, Udayy, Crejo.Fun மற்றும் Eruditus ஆகிய 15 நிறுவனங்கள் 44 சதவீத பணிநீக்க அறிவிப்புகளைச் செய்துள்ளது.
EDTECH நிறுவனங்கள்
கொரோனா தொற்றுக் காலத்தில் EDTECH நிறுவனங்கள் மிகவும் முக்கியமானதாக விளங்கியது மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களையும் வாடிக்கையாளராகப் பெற்றது. இதனால் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்தது.
தவிர்க்க முடியாத பணிநீக்கம்
ஆனால் கொரோனா தொற்றுப் பாதிப்பு முடிந்த பின்பு வாடிக்கையாளர் வெளியேற்ற விகிதம் மிகவும் மோசமான நிலையை அடைந்தது மூலம் வர்த்தகம், வருமானம் இழந்தது. இதேவேளையில் முதலீட்டுப் பிரச்சனை வந்த காரணத்தால் பணிநீக்கம் என்பதை edtech ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது.
ஸ்விக்கி, சோமேட்டோ, OYO
2022 ஆம் ஆண்டின் மத்தியில் ஓலா, கார்ஸ்24, மீஷோ ஆகியவை பணிநீக்கம் செய்த நிலையில் வருடத்தின் இறுதியில் ஸ்விக்கி, சோமேட்டோ, OYO போன்ற பெரிய நிறுவனங்களும் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டும் தொடரும்
இதோடு பல முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்தது. இந்த நிலை 2023ஆம் ஆண்டிலும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.2023ல் உலகில் பெரும்பாலான நாடுகள் ரெசிஷனுக்குள் நுழையும் என்பதால் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அனைத்துத் துறை நிறுவனங்களும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.