மத்திய அரசுக்கான நிதி நிலை, 2019 - 20 நிதி ஆண்டு முடியும் தருவாயிலேயே அத்தனை வலுவாக இல்லை.
2020 - 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் 30.42 லட்சம் கோடி ரூபாயை செலவழிக்க இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அதில் 20.2 லட்சம் கோடி ரூபாயைத் தான் வரி வருவாய்கள் வழியாக ஈட்ட இருப்பதாகவும் சொல்லி இருந்தார்கள்.
அதில் 7.96 லட்சம் கோடி ரூபாயை கடன் வாங்க இருப்பதாகவும் சொல்லி இருந்தார்கள். மீதமுள்ள, வருவாய் பற்றாக்குறையை சரிகட்ட 2.1 லட்சம் கோடி ரூபாய்க்கு அரசின் சொத்து பத்துக்களை விற்று ஈட்ட இருப்பதாகவும் சொல்லி இருந்தார்கள்.
கொரோனா வைரஸ்
யாரும் எதிர்பார்க்காத வகையில், உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி, எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றிவிட்டது. இந்தியா மட்டும் இன்றி எல்லா உலக நாடுகளும் திட்டமிட்ட படி, தங்கள் வேலைகளைச் செய்து பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள். இந்தியாவின் பொதுத் துறை நிறுவன பங்குகள் விற்பனை வேலைகளும் இதனால் கொஞ்சம் தொய்வடைந்தது எனலாம்.
கேபினெட் அனுமதி
இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் 23 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க, ஏற்கனவே மத்திய அரசின் கேபினெட் அமைச்சரவை அனுமதி கொடுத்து இருப்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது. இப்போது, இந்த 23 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் வேலைகளை, மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனே சொல்லி இருக்கிறார்.
2.1 லட்சம் கோடி கணக்கு
2020 - 21 நிதி ஆண்டில், மொத்தம் 2.1 லட்சம் கோடி ரூபாயை, அரசு தன் சொத்து பத்துக்களை விற்று திரட்ட இருப்பதாகச் சொல்லி இருந்தார்கள். அதில் 1.2 லட்சம் கோடி ரூபாயை, பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று ஈட்டப் போகிறார்களாம். மீதமுள்ள 90,000 கோடி ரூபாயை நிதி நிறுவனங்களில் இருக்கும் பங்குகளை விற்று திரட்டப் போகிறார்களாம்.
என் பி எஃப் சி உடன் சந்திப்பு
அதோடு, இந்தியாவின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (என் பி எஃப் சி) மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் போன்றவர்களையும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் சந்திக்க இருக்கிறாராம். இந்த சந்திப்பில், இந்திய வியாபாரிகளுக்கு, இந்த நிதி நிறுவனங்கள், எவ்வளவு கடன் வழங்கி இருக்கிறார்கள் என்பதை பரிசீலனை செய்ய இருக்கிறார்களாம்.