இந்திய வங்கிகளில் அதிகளவிலான கடன்களைப் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல் இந்திய வங்கிகளையும், அரசையும் ஏமாற்றி இந்தியாவை விட்டு வெளியேறிய மோசடியாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து எழுந்த கேள்விக்கு மத்திய நிதியமைச்சகத்தின் மாநில அமைச்சரான அனுரங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.
கடந்த 5 வருடத்தில் இந்திய வங்கிகளை ஏமாற்றி விட்டு எத்தனை பேர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடி உள்ளனர் என்பது குறித்து மத்திய அரசிடம் தகவல் உள்ளதா எனச் சட்ட அதிகாரி Dean Kuriakose கேள்விகேட்ட நிலையில், இதற்கு நாடாளுமன்றத்தில் அனுரங் தாக்கூர் பதில் அளித்துள்ளார்.
38 பேர்
ஜனவரி 1, 2015 முதல் டிசம்பர் 12, 2019 வரையிலான 5 வருட காலத்தில் நிதி மோசடிகளைச் செய்து இந்தியாவை விட்டு சுமார் 38 பேர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியுள்ளனர் எனச் சிபிஐ தெரிவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகத்தின் மாநில அமைச்சரான அனுரங் தாக்கூர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.
ரெட் கார்னர் நோட்டீஸ்
இதோடு சிபிஐ மற்றும் மத்திய அரசு இணைந்து இண்டர்போல் அமைப்பை நாடி நிதி மோசடி செய்து நாட்டை விட்டு தப்பியோடியுள்ள 38 மோசடியாளர்களில் 20 பேருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பபட்டு உள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும். மீதமுள்ள 18 பேரின் நிதி மோசடிகளை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளைச் சிபிஐ எடுக்கத் துவங்கியுள்ளது என அனுரங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தல்
இந்த 38 பேரும் அயல்நாட்டில் குடியுரிமை பெற்றுத் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், அவர்களைத் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதில் பலகட்ட நடவடிக்கைகள் அடங்கியுள்ளதாகவும், ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்ட 20 பேரில் 14 பேருக்கு குற்றவாளியை அயல்நாட்டிடம் ஒப்புவிப்பு கோரிக்கையைப் பல்வேறு நாடுகளிடம் இந்திய அரசு கோரியுள்ளது.
இதில் 11 பேர் மீது Fugitive Economic Offenders Act, 2018 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனுரங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
தடுப்பு நடவடிக்கை
விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோர் பெரிய அளவிலான தொகையை மோசடி செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் மத்திய அரசு நிதி மோசடியாளர்களை நாட்டை விட்டு வெளியேற முடியாத அளவிற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
50 கோடி ரூபாய்
இந்தத் தடுப்பு நடவடிக்கையாக 50 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய கடன்களைப் பெற்ற தனிநபர், நிறுவனத் தலைவர், நிர்வாகத் தலைவர்கள், பிற நிர்வாக அதிகாரிகளின் ஆகியோரின் பாஸ்போர்ட் நகழ்களை கட்டாயம் பெற வேண்டும் எனப் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
5 வருடத்தில் 38 பேர் நிதி மோசடி செய்து நாட்டை விட்டு தப்பித்து ஓடியுள்ளனர், இதைப் பற்றி மக்களாகிய நீங்கள் என்ன நினைகிறீர்கள் என்பதைக் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்.