இந்தியாவில் டிஜிட்டல் சேவைகள் பெரிய அளவில் அடைந்ததிற்கும், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய முதலீடுகள் குவிந்ததிற்கும் முக்கியமான காரணம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான். ஆனால் இன்று சுமார் 38 சதவீத ஸ்டார்ட்அப் நிறுவனம், வர்த்தகத்தைத் தொடர்ந்த நடத்த போதிய பணமில்லாமல் சிக்கித்தவித்து வருகிறது.
பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வர்த்தக வளர்ச்சிக்காகவும், அதிக வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்காகவும், அதிகளவிலான பணத்தை ஆஃபர் மார்கெட்டிங் ஆகியவற்றுக்குச் செலவிடும். இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வேகமான வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்து வருகிறது. ஆனால் கொரோனாவின் பாதிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வர்த்தகத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது.
கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மோசமான நிலையை அடைந்துள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப்
கொரோனா காரணமாக இந்தியாவில் 2 மாதம் முழுமையாக லாக்டவுன் விதிக்கப்பட்ட காலத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை முழுமையாக இழந்து கையிலிருக்கும் பணத்தை மொத்தமாக இழந்தது. இதன் எதிரொலியாகச் செலவுகளைக் குறைக்க ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எவ்விதமான முன் அறிவிப்புமின்றி ஊழியர்களைக் கண்மூடித்தனமாகப் பணிநீக்கம் செய்யதது.
மோசமான நிலை
இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் 38 சதவீத சிறு மற்றும் நடுத்தர ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணம் இல்லாமல் முழுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இது 27 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் 4 சதவீத ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முழுமையாக மூடிவிடுவதாக அறிவித்துள்ளது என LocalCircles என்கிற கம்யூனிட்டி பிளாட்பார்ம் செய்த ஆய்வில் தெரிவித்துள்ளது.
3 முதல் 6 மாதம்
இதேபோல் நிறுவனத்தை நடத்த 3 முதல் 6 மாதம் மட்டுமே பணம் இருக்கும் நிறுவனத்தின் எண்ணிக்கை ஏப்ரல் மாதம் 23 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 16 சதவீதமாகச் சரிந்துள்ளது. தற்போது நிலவும் வர்த்தக மந்தநிலை மேலும் தொடர்ந்தால், நிறுவனத்தை மூடப்படும் எண்ணிக்கையில் இந்த நிறுவனங்களும் சேரும்.
இந்த ஆய்வை சுமார் 8,400 ஸ்டார்ட்அப், SME, தொழிலதிபர்கள் எனச் சுமார் 28,000 பதில்கள் மூலம் உருவாக்கப்பட்ட ஆய்வறிக்கை
வேலைவாய்ப்பு
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிக்கித்தவிக்கும் நிலையில், அடுத்தகட்டமாக நிறுவனத்தை மூடுவதில் இருந்து தப்பிக்க ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்வதில் நிறுவனம் இயங்கும். இதனால் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் இருக்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
புதிய நிறுவனங்கள்
மேலும் Tracxn வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் ஏப்ரல் முதல் ஜூன் 5 வரையில் வெறும் 79 நிறுவனங்கள் தான் seed stage முதலீடுகளைப் பெற்றுள்ளது. இந்த 79 நிறுவனங்களில் செய்யப்பட்ட மொத்த முதலீடும் 47 மில்லியன் டாலர்.
ஆனால் இதுவே கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 188 நிறுவனங்களில் 154.5 மில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.