சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்குவகிக்கும் ஐடி துறையின் வளர்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது கலைஞர் அமைத்த டைடல் பார்க் என்றால் மிகையில்லை.
இந்த நிலையில் ஐடி துறை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் அதிகளவிலான ஐடி நிறுவனங்களை ஈர்க்கும் விதத்திலும், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்ற நோக்கில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் டைடல் பார்க் அமைக்க உள்ளதாகப் பட்ஜெட் அறிக்கையில் அறிவித்துள்ளார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
டைடல் பார்க்
சென்னையில் ஏற்கனவே 2வது டைடல் பார்க் அமைக்கும் பணிகள் தமிழக அரசு கையில் எடுத்துள்ள வேலையில் இந்த அறிவிப்பு 4 மாவட்டங்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
4 புதிய டைடல் பார்க்
இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் இருக்கும் டைடல் பார்க் போலவே தமிழ்நாட்டில் விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
2ஆம், 3ஆம் தர நகரங்கள்
ஐடி நிறுவனங்கள் சமீபத்தில் பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல், அதிகப்படியான செலவுகள் ஆகியவற்றின் காரணத்தால் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் ஐடி நிறுவனங்களை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே கோவை, மதுரையில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்ளது.
ஐடி வேலைவாய்ப்பு
இந்தச் சூழ்நிலையில் விழுப்புரம், வேலூர், திருச்சிற்றம்பலம், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஐடி பார்க் அமைக்கப்படுவதன் மூலம் புதிதாகப் பல ஐடி நிறுவனங்கள் வருவது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் இருக்கும் பட்டதாரிகளுக்கு ஐடி வேலை பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
வளர்ச்சி வாய்ப்புகள்
டைடல் பார்க் அமைப்பதன் மூலம் கட்டுமானம், முதலீடு, வர்த்தகம், மென்பொருள் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு எனப் பல பிரிவுகளில் வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. ஐடி துறைக்கு அதிகப்படியான கவனத்தை அரசு செலுத்துவதின் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி அளவீடு குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் மனோ தங்கராஜ்
கடந்த மாதம் தகவல் தொழில்நுட்ப அமைச்சரான டி மனோ தங்கராஜ் தமிழ்நாட்டுக்கு வர இருந்த வெளிநாட்டு முதலீடுகள் பல கடந்த 10 வருடத்தில் கர்நாடக மாநிலத்திற்கு நிறையச் சென்றுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் கடந்த 10 வருடத்தில் இத்தறையிலிருந்த மந்தமான வளர்ச்சி வாய்ப்புகள் தான் என்று கூறுகிறார்.
முக.ஸ்டாலின் கனவுத் திட்டம்
இதைத் தொடர்ந்து அவர் முதல்வர் முக.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஐடி பார்க் கட்டப்பட்டு அதன் மூலம் தமிழ்நாட்டில் படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் எனக் கனவுத் திட்டத்தை வகுத்துள்ளார் என்றும் மனோ தங்கராஜ் கூறியதைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் செய்தியாக வெளியிட்டு இருந்தது.
மாணவர்களுக்குச் சிறந்த வாய்ப்பு
இந்தத் திட்டம் தற்போது பட்ஜெட் அறிக்கையில் வந்துள்ளது தமிழ்நாட்டில் படித்து வரும் மாணவர்களுக்கு, ஐடி துறையில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பள்ளி மாணவர்களுக்குச் சிறந்த வாய்ப்பாக இருக்கும்.