இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி ஏற்கனவே மிகவும் மோசமான நிலையில் இருக்கும் போது பன்னாட்டு முதலீட்டு நிறுவனம் ஒன்று இந்திய அரசு பத்திர முதலீட்டை குறைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் முதலீடு, பங்குச்சந்தை முதலீட்டை குறைத்திருந்தால் பெரிய விஷயமாக இருந்திருக்காது, ஆனால் இந்த நிறுவனம் அரசு பத்திர முதலீட்டையே குறைத்துள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
அமெரிக்க நிறுவனம்
Western Asset Management Co. என்கிற ஒரு அமெரிக்க முதலீட்டு நிறுவனம் Legg Mason Inc என்னும் மிகப்பெரிய நிதித்துறை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. Western Asset Management Co. நிறுவனம் உலகில் பல நாடுகளில் முதலீடு செய்து சுமார் 453 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துத்துக்களை நிர்வாகச் செய்யும் மாபெரும் நிறுவனமாகும்.
CAA (CCA) மற்றும் காஷ்மீர்
Western Asset Management Co. நிறுவனம் தற்போது இந்தியாவில் இருக்கும் பொருளாதாரச் சூழ்நிலை மட்டும் இல்லாமல் மத்திய அரசு எடுத்துள்ள புதிய குடியுரிமை கொள்கை மற்றும் காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு பத்திர முதலீட்டை குறைத்துள்ளது.
மலேசியா மற்றும் சீனா
இந்திய பத்திர முதலீட்டில் இருந்து வெளியேற்றிய இந்தப் பணத்தை Western Asset Management Co. நிறுவனம் மலேசியா மற்றும் சீனா நாடுகளின் நீண்ட கால முதலீட்டு அடிப்படையில் அரசு பத்திரத்தில் முதலீடு செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் முதலீட்டு வெளியேற்றத்தின் மூலம் இந்திய அரசு பத்திரத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவு 3 மாத சரிவை அடைந்துள்ளது.
இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி 2வது முறையாகப் பதவியேற்று நாளில் இருந்து அவரது முடிவுகள், அரசியல் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம், அமைதி அனைத்தும் பாதித்துள்ளது. பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர மோடி அரசு முயற்சி செய்தும் தொடர்ந்து மோசமான நிலையைத் தான் அடைந்து வருகிறது. இப்பிடியிருக்கையில் தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றும் நோக்கில் இந்தியாவில் இருக்கும் 14 சதவீத முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டம் நாட்டின் அமைதியை கெடுத்துள்ளது.
சொல்லப்போனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இது ஆபத்து காரணிகளாகத் தெரிகிறது என்றால் மிகையில்லை.
உடனடி நடவடிக்கை
மேலும் ஆசியாவின் முதலீட்டு மேலாண்மை அமைப்பின் தலைவர் Desmond Soon கூறுகையில், பிரதமர் மோடி தனது கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்களை விடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வரும் பணியில் இறங்க வேண்டும், நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு வரும் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாங்களும் இந்தியப் பத்திர முதலீட்டைக் குறைக்கத் திட்டமிட்டு வருகிறோம் என Desmond Soon சிங்கப்பூர் கூட்டத்தில் கூறினார்.