எல்லோரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தைப் பார்த்திருப்போம், அதில் ஒரு டயலாக் வரும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழையாகவும் மாறி வருகின்றனர் என்று, அது உண்மையில் இந்தியாவில் நடந்து வருகிறது.
அதுவும் கொரோனா தொற்றுக்குப் பின்பு ஏற்பட்ட பொருளாதார மற்றும் வர்த்தக மாற்றத்தில் அதிகப்படியான நடுத்தர மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டு உள்ளனர். பலர் வர்த்தகம், வேலைவாய்ப்பு இழந்து மோசமான நிலைக்குச் சென்று இன்றளவும் மீள முடியாமல் உள்ளனர்.
இந்த உண்மைத் தன்மையை World Inequality Report 2022 புட்டுபுட்டு வைத்துள்ளது.
1 சதவீத மக்களின் ஆதிக்கம்
இந்தியாவில் வெறும் 1 சதவீத மக்களிடம் (பணக்காரர்கள்) நாட்டின் மொத்த வருமானத்தில் 5ல் ஒரு பங்கு சுமார் 22% உள்ளது, இதுவே டாப் 10 சதவீத மக்களிடம் 57 சதவீத வருமானம் உள்ளது, இதேபோல் பொருளாதார அடிப்படையில் கடைசியில் இருக்கும் 50 சதவீத மக்களிடம் வெறும் 13 சதவீத வருமானம் மட்டுமே உள்ளது என World Inequality Report 2022 அதிர்ச்சி தகவலைத் தெரிவித்துள்ளது.
உலகச் சமத்துவமின்மை ஆய்வகம்
உலகச் சமத்துவமின்மை ஆய்வகத்தின் துணை தலைவர் லூகாஸ் சேன்சல் மற்றும் பிரான்ஸ் பொருளாதார வல்லுனர் தாமஸ் பிங்கெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தியாவில் பணம் இருப்பவர்கள் மற்றும் பணம் இல்லாதவர்கள் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்கிறதோ, அதே அளவிற்கு இருதரப்புக்கு மத்தியிலான இடைவேளையும் அதிகரித்து வருகிறது.
இந்தியா மோசம்
லூகாஸ் சேன்சல் மற்றும் தாமஸ் பிங்கெட்டி இணைந்து உருவாக்கிய World Inequality Report 2022 அறிக்கையின் படி இந்தியா ஆதிக்கம் நிறைந்த பணக்காரர்களையும், அதிகப்படியான ஏழை மக்களைக் கொண்ட சமத்துவமின்மை நிறைந்த நாடாக உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
வெறும் 66,280 ரூபாய்
இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 50 சதவீத குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு வெறும் 66,280 ரூபாய் மட்டுமே என்பது தான் இந்த ஆய்வறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. இதேபோல் பணக்காரர்களாக இருக்கும் 1 சதவீத குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு 32,449,360 ரூபாய். ஆயிரத்திற்கும், கோடிக்கும் வித்தியாசம்...
மிடில் கிளாஸ் மக்கள்
இதேபோல் இந்தியாவில் மிடில் கிளாஸ் எனப்படும் பொருளாதாரத்தில் சற்று மேம்பட்ட ஏழைக் குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு 7,23,930 ரூபாய், மேலும் டாப் 10 சதவீத பணக்கார குடும்பங்களின் சராசரி சொத்து மதிப்பு 6,354,070 ரூபாயாக உள்ளது.
தாராளமயமாக்கல் கொள்கை
இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கைகள் தான் மக்கள் மத்தியில் பொருளாதார ஏற்ற தாழ்வு மற்றும் சமத்துவமின்மை அதிகரிக்க மிகவும் முக்கியக் காரணமாக இருந்துள்ளது. இதேவேளையில் இந்தப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் பணக்காரர்களுக்குப் பெரிய அளவில் உதவியுள்ளது, இதனால் ஏழை மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என World Inequality Report 2022 அறிக்கை கூறுகிறது.
பாலின சமத்துவமின்மை
இதேபோல் இந்தியாவில் பாலின சமத்துவமின்மை-யும் அதிகமாக உள்ளது, பெண் ஊழியர்கள் மொத்த வேலைவாய்ப்புச் சந்தையில் வெறும் 18 சதவீதம் மட்டுமே உள்ளனர். இது ஆசியாவின் சராசரி அளவை காட்டிலும் மிகக் குறைவானது. சீனாவில் இதன் அளவு 21 சதவீதம்.