உலகெங்கிலும் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் 50 சதவீத நிறுவனங்களாவது தங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளன, பெரும்பாலானவை போனஸைக் குறைக்க முடிவு செய்துள்ளது, புதிய வேலை வாய்ப்புகளை ரத்துச் செய்கின்றன எனப் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
அமெரிக்காவில் டெஸ்லா முதல் மைக்ரோசாப்ட், ஆரக்கிள் வரையில் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், இந்தியாவில் முதலாவதாக விப்ரோ தனது ஊழியர்களுக்கான வேரியபிள் பே ரத்து செய்துள்ளது.
PwC நிறுவனம்
அமெரிக்காவில் சமீபத்தில் PwC நிறுவனம் 'Pulse: Managing business risks in 2022' கணக்கெடுப்பின்படி, வர்த்தகத் தலைவர்கள் திறமையான ஊழியர்களைப் பணியமர்த்துவது மற்றும் தக்கவைத்துக் கொள்வதில் அக்கறை காட்டினாலும், இந்த ஆய்வில் பங்கு பெற்றவர்களில் 50 சதவீதம் பேர் தங்கள் நிறுவன ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளனர்.
முக்கிய நடவடிக்கை
அதே நேரத்தில், இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில் பணியாளர்களை நெறிப்படுத்தவும், வரும் காலத்தில் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர் திறன்களைப் பொருத்தமானதாகவும், கலவையானதாகவும் மாற்ற முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு சந்தை
கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள், போதிய ஊழியர்கள் கிடைக்காத நிலையெல்லாம் இருந்ததது. இந்தக் காலகட்டத்தில் தான் ஊழியர்களுக்குச் சம்பளம் வாரி வழங்கப்பட்டுப் பணியில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய முடிவு
ஆனால் தற்போது சந்தை நிலவரத்தைப் பார்க்கும் போது சரியான திறன்களைக் கொண்டவர்கள் மற்றும் சாதாரண ஊழியர்கள் மத்தியில் யார் நிறுவனத்திற்கு வேண்டும் வேண்டாம் என்ற முடிவை எடுக்க நிர்வாகிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
அமெரிக்கா
மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா போன்ற பெரிய டெக் நிறுவனங்கள் உட்பட அமெரிக்காவில் ஜூலை வரை 32,000 க்கும் மேற்பட்ட டெக் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா
இந்தியாவில், கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 25,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதில் 2022 ஆம் ஆண்டு 12,000 க்கும் அதிகமானோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.