இந்தியாவில் உள்ள முக்கிய நான்கு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பணியாளர்கள் 58,000க்கும் மேற்பட்டோர் இரண்டு நாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஜூலை 27, 28 ஆகிய இரண்டு நாட்களில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட ஒரு சில கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்த அறிவிப்பு காரணமாக இன்சூரன்ஸ் ஊழியர்கள் மற்றும் இன்சூரன்ஸ் பயனாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைநிறுத்தம்
நான்கு முக்கிய பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களைச் சேர்ந்த 58,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மத்திய அரசின் ஆதரவு இல்லாததை கவனத்தில் கொண்டு வர ஜூலை 27, 28 தேதிகளில் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். கடந்த இரண்டு தவணைகளாக ஊதிய மறுசீரமைப்பு தாமதம் ஆனதால் வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக அத்துறையின் உயர்மட்டத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
நான்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
நாடு முழுவதும் உள்ள நான்கு முக்கிய பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வார்கள். நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட், நேஷனல் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் மற்றும் யுனைடெட் இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட், ஆகிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளது.
பொது காப்பீட்டு ஊழியர் சங்கம்
பொது காப்பீட்டு ஊழியர் சங்கம் (மேற்கு மண்டலம்) (GIEU), பணித் தலைவர், லலித் சுவர்ணா இந்த வேலைநிறுத்தம் குறித்து கூறியபோது, 'ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் கடைசி ஊதிய திருத்தம் ஆகஸ்ட் 2012 இல் செய்யப்பட்டது. அடுத்த ஊதிய திருத்தம் ஆகஸ்ட் 2017 முதல் ஆகஸ்ட் 2022 வரையிலான ஐந்து ஆண்டு கால ஊதிய திருத்தம் செய்யப்படாமல் இன்னும் நிலுவையில் உள்ளது' என்று கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க நாங்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவும், நீண்ட கால தாமதமான ஊதிய திருத்தத்தை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
தனியார்மயமாக்கம்
GIEU தலைவர் உதயன் பானர்ஜி இதுகுறித்து கூறியபோது, 'காப்பீட்டு ஊழியர்கள் ஜூலை 15 அன்று ஒரு நாள் டோக்கன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் ஊதிய திருத்தம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முடிந்ததால், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் லிமிடெட். ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தமும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீர்க்கப்பட்டது. இருப்பினும், பொதுத்துறை ஜி.ஐ.சி.க்கள் நீண்ட காலமாக விடுபட்டுள்ளன. மத்திய அரசின் நோக்கம் இந்த நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, ஊழியர்களை விஆர்எஸ் எடுக்க நிர்பந்திப்பது மற்றும் வெளியேற்றுவதாக உள்ளது' என்று குற்றம் சாட்டினார்.
எல்.ஐ.சிக்கு இணையாக ஊதியம்
GIEU செயலர் ஜிதேந்திர இங்லே கூறுகையில், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட்., அரசின் மோசமான கொள்கைகளால் நஷ்டம் அடைந்து வருவதாகவும், இந்த நிறுவனங்களின் தலைவர்கள், நிதிச் சேவைத் துறை இணைச் செயலரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் கூறினார். மேலும் 2022 ஜூன் 23 அன்று மத்திய அரசுக்கும் காப்பீட்டு நிறுவனங்களின் நிர்வாகத்திற்கும் நிலுவையில் உள்ள ஊதிய திருத்தத்தை எல்ஐசிக்கு இணையாக தீர்த்து தீர்வு காண வலியுறுத்தி, விரிவான கடிதம் அனுப்பியுள்ளதாகவும், ஆனால் அந்த கடிதத்திற்கு எந்தவித பதிலும் இப்போது வரை இல்லை என்றும் தெரிவித்தார்.
காலிப்பணியிடங்கள்
பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும் என்றும் பொது காப்பீட்டு நிறுவனங்களை பலப்படுத்த கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுமட்டுமின்றி இன்சூரன்ஸ் நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளாக வைத்துள்ளனர். மேலும் அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.