திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு. பையனுக்கு பெண்ணும், பெண்ணுக்கு பையனும் பார்க்கும்போது பல பொருத்தங்கள் பார்த்து நம் முன்னோர்கள் திருமணம் செய்து வைப்பார்கள்.
தற்போதைய தொழில்நுட்ப உலகில் இணையதளங்கள் மூலமாகவும் மணமகன், மணமகள் பார்த்து திருமணம் செய்தும் வரும் வழக்கமும் உள்ளது.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த 700 ஆண்டுகளாக சந்தையில் மணமகனை தேர்வு செய்யும் மணமகள் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணமகன் சந்தை
பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி என்ற மாவட்டத்தில் பிரத்யேகமாக திருமணத்திற்கு என்றே ஒரு சந்தை உள்ளது. அங்கு பல பெண்கள் தங்களது வருங்கால கணவனை தேர்ந்து செய்ய வரிசையாக நிற்கும் ஆண்களில் ஒருவரை தேர்வு செய்து திருமணம் செய்து கொடுக்கிறார்கள்.
மணமகன் தேர்வு
மணமகன் சந்தை அல்லது சௌரத் மேளா அல்லது சபாகாச்சி என்று அழைக்கப்படும் இந்த முறை பீகாரில் சுமார் 700 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்தைக்கு வரும் பெண்கள் தங்கள் விருப்பத்துக்குரிய மணமகனை தேர்வு செய்து கொள்கிறார்கள் என்றும், மணமகள் மணமகனை தேர்வு செய்தவுடன் அங்கேயே திருமண சடங்குகள் நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சான்றிதழ்கள்
மணமகனை தேர்வு செய்வதற்கு முன்னர் வருங்கால கணவரின் குடும்பம், தகுதி, குடும்பத்தின் பின்னணி, வயது சான்று, பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை இருதரப்பினர்களும் பரிமாறி கொள்கின்றனர். ஒரு பெண் ஒரு ஆணை விரும்பி திருமணம் செய்ய ஒப்புக் கொண்டால் இரு தரப்பு குடும்பத்தில் உள்ள ஆண்கள் திருமண பேச்சுவார்த்தையை நடத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
மணமகன் உடை
இந்த மணமகன் சந்தைக்கு வரும் ஒவ்வொரு மணமகனும் பாரம்பரிய கருஞ்சிவப்பு நிற வேட்டி மற்றும் குர்தா அணிந்திருப்பார்கள் என்றும், ஒரு சிலர் ஜீன்ஸ் மற்றும் சட்டையை அணிந்திருப்பார்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப அவர்கள் விலை போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
புராணங்கள்
உள்ளூரில் வாய்மொழியாக பல ஆண்டுகளாக கூறப்படும் புராணங்களின்படி இந்த பாரம்பரிய மணமகன் சந்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த மணமகன் சந்தை அந்த பகுதியை ஆட்சி செய்த ராஜா ஹரி சிங்கால் தொடங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஏழு தலைமுறை உறவு
இந்த பாரம்பரிய திருமணத்தின் மூலம் வரதட்சணை இல்லாத திருமணம், சாதி வேறுபாடு ஆகியவை ஒழிந்து விடுவதாகவும் மணமகனுக்கும் மணமகளுக்கும் 7 தலைமுறைகளுக்கு இடையே ரத்த உறவுகள் இருப்பதால் அவர்கள் இந்த சந்தை மூலம் அவர்கள் இணைகின்றனர் என்றும் அந்த பொதுமக்கள் நம்புகிறார்கள்.
வரதட்சணை ஒழிகிறதா?
ஆனால் அதே நேரத்தில் மணமகனை மணமகளுக்கு பிடித்து விட்டால் அதன் பிறகு நடக்கும் பேச்சுவார்த்தையில் முழுக்க முழுக்க வரதட்சிணை ஒழிந்தது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சில வரதட்சணை பேரங்கள் நடக்கத்தான் செய்கிறது என்றும் அந்த பகுதியில் உள்ளவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் மற்ற பகுதியில் உள்ள வரதட்சணை கொடுமை இந்த சந்தையில் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
திருமண சடங்கு
பெண்களை பெற்ற பெற்றோர் தங்கள் மகள்களுடன் இந்த சந்தைக்கு நம்பிக்கையுடன் வருகிறார்கள் என்றும் பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு பொருத்தமான துணையை சந்தையில் கண்டுபிடித்தவுடன் அங்கேயே பேச்சுவார்த்தைகளை நடத்தி திருமண சடங்குகளையும் முடித்து விடுகிறார்கள் என்றும் இந்த சந்தையை நிர்வகித்து வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.