உலகில் தொழில்நுட்பம் வளர்ச்சி வேகமாக வளர்ந்து வரும் நிலையில் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை இயந்திரங்களும், தொழில்நுட்பம் பறித்து வருகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தால் எப்போதும் இல்லாத வகையில் அடுத்த 5 வருடத்தில் உலகம் முழுவதிலும் சுமார் 8.7 கோடி வேலைவாய்ப்புகளை இயந்திரங்களிடம் மனிதர்கள் இழக்க நேரிடும் என உலகப் பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதார அமைப்பு 'Future of Jobs Report 2020' என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், இயந்திரங்களின் மேம்பாட்டாலும் மனிதர்களின் 8.7 கோடி வேலைவாய்ப்புகளை இயந்திரங்கள் கைப்பற்றும் என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தியைத் தெரிவித்துள்ளது.
இந்த அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தோடு ஒரு மகிழ்ச்சியான தகவலையும் உலகப் பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
நல்ல செய்தி
மனிதர்களின் வேலைகளை இயந்திரங்கள் கைப்பற்றும் நிலையில், உலகளவில் சில முக்கிய மாற்றங்கள் நடக்கப்போகிறது. அந்த மாற்றத்தில் மனிதர்கள், இயந்திரங்கள் மற்றும் அல்காரிதம் ஆகிய 3க்கும் இடையில் இயங்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இப்புதிய பிரிவில் மட்டும் சுமார் 9.7 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் அளவிற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
முக்கிய மாற்றம்
ஒவ்வொரு வருடக் கணிப்பிலும் இயந்திரங்கள் கைப்பற்றும் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையை விடவும் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். ஆனால் முதல் முறையாக இந்த வருட ஆய்வறிக்கையில் புதிதாக உருவாகும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆனால் புதிய வேலைவாய்ப்புகள் அனைத்தும் தொழில்நுட்பத்தைச் சார்ந்து இருப்பதால் கல்வி மற்றும் திறன் தேவை மிகவும் அதிகமாகத் தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது.
ஆட்டோமேஷன்
ஏற்கனவே பெரும் நிறுவனங்கள் அதிகளவிலான பணிகளை ஆட்டோமேஷன் செய்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பு ஆட்டோமேஷனின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
இதனால் அடுத்த 5 வருடத்தில் பெரும் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் நடுத்தர அளவிலான நிறுவனங்களும் அதிகளவிலான பணிகளை ஆட்டோமேஷன் செய்யும் நிலை உருவாகியுள்ளது.
ஆய்வு
அடுத்த வரும் 5 வருடத்தில் உலகப் பொருளாதார அமைப்பு செய்த ஆய்வில் 43 சதவீத நிறுவனங்கள் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் பல ஆட்டோமேஷன் பணிகளைச் செய்ய முடிவு செய்துள்ளது.
இதேபோல் 41 சதவீத நிறுவனங்கள் காண்டிராக்ட் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், 34 சதவீத நிறுவனங்கள் ஆட்டோமேஷன் பணிகளுக்காக டெக் பிரிவில் அதிக ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது என ஆய்வுகள் கூறுகிறது.