பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 2 ஆம் தேதி) அறிமுகம் செய்யும் e-RUPI என்ற புதிய டிஜிட்டல் பேமெண்ட் தளம் மூலம் மக்களுக்கு அரசின் திட்டப் பலன்களை நேரடியாக அளிக்கச் சாத்தியக்கூறுகள் இருக்கும் காரணத்தால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இந்தச் சேவை எந்தெந்த வங்கிகளில் அளிக்கப்படுகிறது, தனியார் வங்கிகளும், பொதுத்துறை வங்கிகளும் எந்த அளவிற்கு இப்புதிய பேமெண்ட் தளத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதை காண்போம்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அதாவது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தத் தடை அறிவித்த நாளில் இருந்து இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைக்கும், அதன் பயன்பாட்டுக்கும் மக்கள் மத்தியிலும், அரசு அமைப்புகள் மத்தியிலும் அதிகளவிலான ஊக்குவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
e-RUPI சேவை
இன்று (ஆகஸ்ட் 2 ஆம் தேதி) அறிமுகம் செய்யப்படவுள்ள e-RUPI என்கிற புதிய டிஜிட்டல் பேமெண்ட் தளத்தை மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய பேமெண்ட் கார்பரேஷன் ஆப் இந்தியா (NPCI) தலைமையில் மத்திய நிதியியல் சேவைத் துறை, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய சுகாதார அமைப்பு இணைந்து உருவாக்கப்பட்டு உள்ளது.
பணமில்லா டிஜிட்டல் பேமெண்ட்
பணமில்லா டிஜிட்டல் பேமெண்ட் சேவையான e-RUPI சேவையைப் பயன்படுத்த கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட், மொபைல் ஆப், இண்டர்நெட் பேங்கிங் போன்று எதுவும் தேவையில்லை ஏன் வங்கி கணக்கு இல்லாதவர்கள் கூட இதைப் பயன்படுத்த முடியும்.
மத்திய அரசின் திட்டம்
இதனால் அனைத்து தரப்பினருக்கும் இந்தச் சேவையை கொண்டு சேர்க்க முடியும் என்பது தான் மத்திய அரசின் திட்டம். e-RUPI சேவையை பெற வெறும் மொபைல் போன் மற்றும் மொபைல் எண் வைத்திருந்தாலே பயன்படுத்த முடியும்.
எஸ்எம்எஸ் மூலம் பேமெண்ட்
e-RUPI பேமெண்ட் முறை வெறும் எஸ்எம்எஸ் அல்லது QR கோட் உடன் இயங்கும் காரணத்தால் இண்டர்நெட் இணைப்பு கூட வேண்டியது இல்லை என்பது மற்றொரு முக்கியமான விஷயம். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் பேமெண்ட் முறை gift-voucher முறையில் இயங்கும் காரணத்தால் வங்கியில் எஸ்எம்எஸ் அல்லது QR கோட் உடன் பணத்தை எளிதாகப் பெற முடியும்.
தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி
மோடி அறிமுகம் செய்த e-RUPI டிஜிட்டல் பேமெண்ட் சேவையை NPCI அமைப்பு தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் வாயிலாக அளிக்க முடிவு செய்துள்ளது. இச்சேவையைப் பெற விரும்பும் அரசு அமைப்புகள், தனியார் மற்றும் அரசு நிறுவனம் வங்கிகளுடன் இணைந்து இச்சேவையைப் பெறலாம்.
8 வங்கிகளுக்கு அனுமதி
தற்போது தேசிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்தியாவில் சுமார் 8 வங்கிகளுக்கு e-RUPI சேவை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட வங்கியில் 4 பொதுத்துறை வங்கிகள், 4 தனியார் வங்கிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
8 வங்கிகள்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இன்டஸ்இந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
நலத் திட்டங்கள்
e-RUPI சேவை மூலம் மத்திய அரசு அளித்து வரும் பல்வேறு நல திட்டங்களுக்கான நிதி பலன்களை நேரடியாக மக்களின் கைகளுக்கே கொண்டு செல்லும் முறையை உருவாக்கியுள்ள காரணத்தால், இனி வரும் காலத்தில் அரசு மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமாயின் நேரடியாகப் பணத்தை e-RUPI சேவை மூலம் மக்களுக்கு அளிக்க முடியும்.
மத்திய அரசின் திட்டங்கள்
உதாரணமாக மத்திய அரசின் குழந்தை நல திட்டத்தின் கீழ் குழந்தை மற்றும் தாய்க்கான மருந்து மற்றும் ஊட்டச்சத்து திட்டப் பலன், காசநோய் ஒழிப்பு திட்ட பலன், ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் மருந்து மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கான பலன்கள், விவசாயிகளுக்கான உர மானியம், எனப் பல திட்டங்களுக்கு மக்களுக்கு நேரடியாகப் பணத்தைக் கொடுக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
சுகாதாரத் துறை
முதல் கட்டமாக மத்திய அரசு e-RUPI சேவை சுகாதாரத் துறையில் மட்டும் பெரிய அளவில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். மேலும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என அரசு நம்புகிறது.
மாநில அரசும்
இதன் வெற்றி மற்றும் பிரச்சனைகள் மற்றும் மேம்பாடுகளுக்குப் பின்பு மானியங்கள், கல்வி உதவித் தொகை, நிதியுதவி என அனைத்தையும் இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் மாநில அரசும் இத்திட்டத்தைப் பயன்படுத்த முடியும் என்ற காரணத்தால் இது அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.