இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் மற்றும் நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான ஐடிசி பங்குகள் 2020ல் மார்ச் லாக்டவுன் அறிவிப்பில் பெரிய அளவிலான சரிவை அடைந்து சுமார் 28 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், தனது ஜனவரி 2020 (கொரோனாவுக்கு முன்) உச்சத்தை இதுவரை தொடவில்லை.
இந்த நிலையில் 2021ல் ஐடிசி நிறுவனப் பங்குகளைக் கடுமையாகப் பாதிக்கும் இரண்டு முக்கியமான விஷயங்களை மத்திய அரசு செய்ய உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இந்நிறுவனம் மீது முதலீடு செய்யத் தயங்கி வருகின்றனர்.
லாக்டவுன் அறிவிப்பு
2020-21ஆம் நிதியாண்டு துவக்கத்திலேயே கொரோனா தொற்று மிகப்பெரியதாக வெடித்து லாக்டவுன் உடன் துவங்கிய நிலையில் சிகரெட் விற்பனை பெரிய அளவில் குறையும் எனக் கணித்த ஐடிசி நிறுவன முதலீட்டாளர்களுக்குப் பெரிய பாதிப்புகளை எற்படுத்தாமல் கணிசமான பாதிப்பை மட்டுமே எதிர்கொண்டனர்.
பட்ஜெட் 2021
இந்நிலையில் 2020-21ஆம் நிதியாண்டில் கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாக மத்திய அரசின் வரி வருமானம் அதிகளவில் குறைந்துள்ளதை அடுத்து பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் 2021ல் சிகரெட் மீதான வரி அதிகளவில் உயர்த்தப்படும் என்கிற பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
தொடர் வரி உயர்வு
மேலும் கடந்த சில வருடங்களாகவே புகையிலை பொருட்கள் மீதான சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகத் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகக் கடந்த 3 வருடங்களாகச் சிகரெட் மீதான வரி தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவது மட்டும் அல்லாமல் இதன் மீதான கட்டுப்பாடுகளும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இதில் sin goods-க்கான வரியும், செஸ் ஆகியவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
வயது வரம்பு உயர்த்தல்
இதுமட்டும் அல்லாமல் தற்போது மத்திய அரசு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் வாங்கக் குறைந்தபட்ச வயது வரம்பை 18ல் இருந்து 21ஆக உயர்த்தப்படும் மசோதாவைத் தயாரித்து வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் மசோதா
இந்த மசோதா ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தப்பட்டால் 21 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்குச் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது. இதேபோல் 21 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் வாங்கவும் கூடாது மீறினால் இரண்டுமே சட்டப்படி குற்றமாகும்.
முழுப் பாக்கெட் விற்பனை
இதேபோல் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் போது முழுப் பாக்கெட்-ஆக மட்டுமே விற்பனை செய்ய வேண்டியது இந்த மசாதா மூலம் கட்டாயமாகியுள்ளது. மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ள மசோதா படி இதை மீறுபவர்கள் மீது விதிக்கப்படும் அபராதமும் 200 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் வரையில் உயர்த்தப்பட உள்ளது.
மேலும் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஒரு வருட சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட உள்ளது.
சிகரெட் விற்பனை பாதிப்பு
இந்நிலையில் புதிய மசோதா அமலாக்கப்படும் நிலையில் சிகரெட் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பது என்பது மிகவும் கடினமாகும். இதனால் மொத்த சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களும், விற்பனை சந்தையும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ஐடிசி நிறுவனம்
இந்த மசோதா மூலம் சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனை வாயிலாக 50 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தையும், லாபத்தையும் பெறும் ஐடிசி நிறுவனம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும். இதனால் முதலீட்டாளர்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.