கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்படுவதாக கூறப்பட்டதால் தமிழக அரசு தடை காரணமாக நிரந்தரமாக மூடப்பட்டது.
அதன்பின்னர் ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட் வரை சென்றும் இதுவரை ஆலையை திறப்பதற்கான எந்தவிதமான அறிகுறியும் தெரியவில்லை. இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் ஆலை நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் எத்தனை கோடி ரூபாய் நஷ்டம் என்பது குறித்த ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அந்த அறிக்கையில் பெரும் அதிர்ச்சி தரும் தகவல்கள் உள்ளன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை
2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் தாமிர உருக்காலை ஆலை மூடப்பட்டதால், சுமார் 14,749 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
13 பேர் சுட்டுக்கொலை
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்தா நிறுவனம் மாசு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அதனால் ஏற்பட்ட போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை அடுத்து ஸ்டெர்லைட் தாமிர ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.
மொத்த இழப்பு
CUTS இன்டர்நேஷனலின் தொகுப்பு அறிக்கையில், 'தூத்துக்குடி தாமிர ஆலை மூடப்பட்டதால் அனைத்து பங்குதாரர்களுக்கும் பெரும் இழப்பு என்றும், இந்த ஆலை மூடப்பட்டதால் 2018ஆம் ஆண்டுக்கு பின் மொத்த இழப்பு சுமார் 14,749 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு இழப்பு
ஆலை மூடப்பட்ட காலம் முதல் தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (SGDP) சுமார் 0.72 சதவீதம் இழப்புஆகும். ஆலை மூடப்பட்ட காலம் முழுவதும் ஒட்டுமொத்த இழப்பு தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (SGDP) சுமார் 0.72 சதவீதம் இழப்பு ஆகும். ஆலை மூடப்பட்டதால் வேதாந்தா நிறுவனத்திற்கு சுமார் 4,777 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு வரி இழப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடப்பட்டதால் வரிகள் வடிவில் தமிழக அரசு கணிசமான வருவாயை இழக்கிறது என்று நிதி ஆயோக்கின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் நிர்வாகம் மறுப்பு
கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி துறைமுக நகரத்தில் நடந்த வன்முறை போராட்டங்களை தொடர்ந்து அந்த யூனிட்டை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம் கடந்த காலங்களில் தனது ஆலை உள்ளூர் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளை பலமுறை மறுத்துள்ளது. மேலும் யூனிட்டை திறக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
தாமிர தேவை
தூத்துக்குடி ஆலையானது உள்நாட்டு தாமிர தேவையில் 40 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்ததாகவும், தாமிரத்தில் நாட்டின் தன்னிறைவு பெறுவதில் முக்கியப் பங்காற்றியுள்ளதாகவும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.