பாக்தாத்: ஈராக் மண்ணில் அமெரிக்காவிற்கும்-ஈரானுக்கும் இடையில் போர் நடைபெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே, ஈராக்கில் உள்ள இந்திய சமூகத்தினரிடையே பதட்டம் நிலவுகிறது.
ஈராக்கில் சுமார் 25,000 இந்தியர்கள் பணிபுரிகின்றனர், முக்கியமாக உள்கட்டமைப்பு மற்றும் எண்ணெய் வளத் துறைகளில் அவர்கள் பங்களிப்பு கணிசமாக உள்ளது.
குர்திஸ்தானின் வடக்கு தன்னாட்சி பிராந்தியத்தின் தலைநகரான எர்பில், நகரில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பலர் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்கள்
இதுபற்றி, ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ஈராக்கின் எந்த ஒரு பகுதியிலும், இந்திய நாட்டினருக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை.
உள்கட்டமைப்பு மற்றும் எண்ணெய் தொடர்பான நிறுவனங்களில், தேசிய தலைநகரான பாக்தாத் மற்றும் தெற்கு துறைமுக நகரமான பாஸ்ராவில் அதிக அளவில் இந்தியாவை சேர்ந்த முறைசாரா தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டு உள்ளனர்.
ஐ.நா. தூதர் விளக்கம்
பாக்தாத்திலுள்ள. ஐ.நா தூதர் இதுகுறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஈராக்கில் நிலைமை பதட்டமாகத்தான் உள்ளது. எல்லா இடங்களிலும் பீதி நிலவுகிறது. ஆனால் அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். பாக்தாத்தில் உள்ள இந்தியாவின் தூதர் மற்றும் ஈராக் அரசிடமிருந்து, எனக்கு இதுதொடர்பாக உறுதிப்படுத்தல் கிடைத்துள்ளது. ஐ.நா.வும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று கூறியுள்ளார்.
இந்தியர்கள் நிலை
மேலும் அவர் கூறுகையில், எண்ணெய் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் ஒரு சில நல்ல ஊதியம் பெறும் நிர்வாகிகளைத் தவிர, மற்றவர்கள் எண்ணெய், உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பணியாற்றும் முறைசாரா தொழிலாளர்கள்.
எர்பில் தாக்குதல்
ஏராளமான இந்தியர்கள் எர்பில் பகுதியில் உள்ளனர். ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தில் இருப்பதால் சிலர் பொருளாதார ரீதியாக, நன்றாக இருக்கிறார்கள். சில நிபுணர்களும் இருக்கிறார்கள். குர்திஸ்தான் ஒரு பாதுகாப்பான பகுதி. ஆனால் எர்பில் அருகே உள்ள அமெரிக்கத் தளம் ஈரானால் தாக்கப்பட்டுள்ளது. இது பதட்டங்களுக்கு வழிவகுக்கும். இது ஒரு கவலைக்குரிய விஷயம், என்றார்.
புதிய வேலை
நிலைமை இயல்பு நிலைக்கு வரும் வரை புதிதாக இந்தியர்களை ஈராக் நாட்டிற்குள் பணிக்காக அனுமதிக்க வேண்டாம் என்று ஐ.நா. அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஈராக்கிற்கான இந்தியாவின் தூதருக்கு அறிவுறுத்தியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொடூர கொலை
மொசூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால், 2014 ஆம் ஆண்டு சுமார் 40 இந்தியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இதற்கு பிறகு, ஈராக்கில் எங்கும் இந்தியர்கள் மீது எந்த தாக்குதலும் நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.