தமிழ்நாடு மட்டுமல்ல மொத்த இந்தியாவும் கோடைக் காலம் வந்தாலே மிரண்டு போகும் நிலைமை உருவாக்கியுள்ளது, இதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து உயர்ந்து வரும் வெப்ப நிலை தான்.
இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் தான் இந்தியாவில் ஏசி-யின் விற்பனை அதிகமாக இருக்கும். பொதுவாகக் கோடைக்காலத்தில் ஏசி, பேன், ஏர் கூலர் ஆகியவற்றின் விற்பனை அதிகமாக இருக்கும், இதற்கு ஏற்றார்போல் விற்பனையாளர்களும் தள்ளபடி, ஆஃபர் என அள்ளி வீசுவார்கள். ஆனால் தற்போது கோடைக் காலம் துவங்குவதற்கு முன்பாகவே ஏசி விலை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் இந்த வருடம் ஏசி விற்பனை அதிகளவில் பாதிக்கும் எனத் தெரிகிறது.
5 சதவீத வரி உயர்வு
கோடைக் காலத்திற்குத் தயாராகி வரும் ஏசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்த வருடம் மோசமான காலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இதற்கு 2 காரணம் ஏசியில் பொருத்தப்படும் கம்பிரசர்கள் மீதான இறக்குமதி வரி 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2வது ஏசி கம்பிரசர்களை அதிகளவில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் சீனா தற்போது கொரோனா வைரஸ்-ல் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் போக்குவரத்துச் செலவு மற்றும் இதன் அடிப்படை விலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படுகிறது.
விலை உயர்வு
இந்த 2 முக்கியக் காரணங்களால் இந்தியாவில் விற்பனையாகும் ஏசி-யின் விலை இந்த வருடம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏசி வாங்கத் திட்டமிடும் மக்கள் அனைவரும் அதிகப் பணத்தைக் கொடுக்கத் தயாராக வேண்டும் என இத்துறையில் நிறுவனங்கள் கூறும் செய்திகள் மூலம் விளங்குகிறது.
இந்நிலையில் ஏசி தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவை விடுத்துத் தற்போது தாய்லாந்து மற்றும் மலேசியாவில் இருந்து ஏசி கம்பிரசர்களை வாங்க முடிவு செய்துள்ளது.
சீனா
இந்தப் பிரச்சனை ஏசி துறையில் மட்டும் தான் என்றால் நிச்சயம் இல்லை. சீனா தயாரிப்புகளையும், சீன பொருட்களை நம்பி வர்த்தகம் செய்யும் அனைத்துத் துறையில் உற்பத்தியில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் ஸ்மார்ட்போன், எல்சிடி மற்றும் எல்ஈடி டிவி தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
கோடைக் கால விற்பனை
ஒரு வருடத்தில் விற்பனையாகும் ஏசி, ஏர் கூலர் மற்றும் பேன் ஆகியவற்றின் மொத்த விற்பனையில் 40-45 சதவீத பொருட்கள் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் அதாவது கோடைக் காலத்தில் விற்பனையாகும். தற்போது சீனாவில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத கொரோனா வைரஸ் பாதிப்பு இத்துறை வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
2000 பேர் பலி
சீனாவில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கிய கொரோனா வைரஸ் தற்போது அங்குள்ள சிறைகளில் வேகமாகப் பரவி வருவது அந்நாட்டு அரசை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கொரோனா வைரஸ்-ல் சீனாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த மருந்தேதும் இல்லாததால் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
25 நாடுகள்
இது மேலும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. மேலும் சீனாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஹூபெய் மாகாணத்தில் உள்ள சிறைகளில் 271-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.