உலக அளவில் இப்போது தான் புயல் அடித்து ஓய்ந்தது போல, ஓரளவுக்கு பொருளாதாரங்கள் எல்லாம் மீண்டும் சீராகத் தொடங்கி இருக்கின்றன.
இந்த நேரத்தில், உலக அளவில் ஒரு முக்கியமான ஐடி கம்பெனி, உலகம் முழுக்க வேலை பார்க்கும், தன் மொத்த ஊழியர்களில் சுமார் 5 சதவிகிதம் பேரை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
எந்த கம்பெனி? எத்தனை பேரை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பப் போகிறார்கள்? ஏன் இந்த நடவடிக்கை? வாருங்கள் பார்ப்போம்.
அக்செஞ்சர்
ஐயர்லாந்தின், டப்ளின் நகரத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது அக்செஞ்சர் கம்பெனி. இந்த கம்பெனியில் ஒட்டு மொத்தமாக 5.09 லட்சம் ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த கம்பெனி 120 உலக நாடுகளில் இருக்கும் தன் வாடிக்கையாளர்களுக்கு, தன் சேவைகளை வழங்கி வியாபாரம் செய்து வருகிறது.
25,000 பேர்
அக்செஞ்சர் கம்பெனி, தன் மொத்த 5.09 லட்சம் ஊழியர்களில், சுமாராக 5 சதவிகிதம் ஊழியர்களை, (25,000 ஊழியர்கள்) வேலையில் இருந்து நீக்கி, வீட்டுக்கு அனுப்பப் போகிறார்களாம். சிறப்பாக செயல்படாத ஊழியர்களைத் தான் வேலையில் இருந்து நீக்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவில் எத்தனை பேர்
அக்செஞ்சர் ஐடி கம்பெனியில், இந்தியர்கள் நிறைய பேர் வேலை பார்த்து வருகிறார்கள். மொத்த 5.09 லட்சம் ஊழியர்களில் சுமாராக 2 லட்சம் இந்தியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாம். கம்பெனியின் லே ஆஃப் நடவடிக்கையால் ஆயிரக் கணக்கான இந்தியர்களும் பாதிக்கப்படலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியாவில் ஆட்களை எடுப்போம்
இந்தியாவில் தொடர்ந்து வேலைக்கு ஆட்களை எடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது அக்செஞ்சர் தரப்பு. அதோடு, சமீபத்தில், பல இந்திய ஊழியர்களுக்கு அக்செஞ்சர் போனஸ் & பதவி உயர்வுகளை எல்லாம் கூட கொடுத்து இருக்கிறதாம். ஆனால் இந்தியர்களும் இந்த 5 % லே ஆஃப் வளையத்துக்குள் வருகிறார்களா இல்லையா என தெளிவு படுத்தவில்லை கம்பெனி தரப்பு.
ஊழியர்களின் செயல்பாடு பரிசீலனை
ஒவ்வொரு வருடமும், ஊழியர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் போது, சம்பந்தப்பட்ட ஊழியர்களை அழைத்து, அவர்களின் செயல்பாடுகளைப் பற்றி பேசுவோம். அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய ஏரியாக்களைப் பற்றியும் எடுத்துச் சொல்வோம். இன்னும் எப்படி முன்னேறலாம், அவர்கள் நீண்ட காலத்துக்கு அக்செஞ்சரில் வேலை பார்க்க சரியான நபரா என்பது வரை அவர்களிடம் பேசுவோம் என்கிறது அக்செஞ்சர் தரப்பு.
5% ஊழியர்கள்
இந்த வருடம், எங்களின் எல்லா வியாபார பகுதிகள் (Part of Business) மற்றும் எல்லா பணிப் படிகளில் (Career Level) இருந்தும், மிக குறைந்த அளவு மட்டுமே செயல்பட்ட ஊழியர்களைக் கண்டு பிடித்து வேலையில் இருந்து நீக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது அக்செஞ்சர். இது ஒவ்வொரு ஆண்டும் செய்வது தான் எனவும் சொல்லி இருக்கிறது அக்செஞ்சர் கம்பெனி தரப்பு.